திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களுக்கான அரசியல் வாய்ப்புகள், அங்கீகாரம் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.
இதுவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், தற்போது பல கட்சிகள் தங்களது அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேபோன்று புரட்சி பாரதம் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றன.
மேலும் பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகளும் தங்களது முடிவுகளை எடுக்கத் தயாராக உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக போன்றவற்றால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை பல சிறு கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களிடையே நிலவுகிறது.
இதனால், சமூக நீதி, சமத்துவம் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக்காக புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களும் இந்த அரசியல் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்.
நான் தான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவாகவிற்கு கட்டமைப்பு உள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்குள் மற்ற அணிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
அவர் மக்கள் பிரச்சனைகளை பேசட்டும். விஜய் ஒரு பச்சைத்தமிழர். விஜய் அரசியலுக்கு வந்த போது, நான்தான் முதல் அரசியல்வாதியாக வரவேற்றேன். அதேபோல் விஜய் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இந்த தேர்தலில் தவெக உடன் தவாக கூட்டணி இல்லை. திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க எந்த முடிவையும் கூட எடுப்போம்” என்று பேசியிருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
