234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட முடியாத காரணத்தினால் 233 தொகுதிகளில் மட்டுமே களமிறங்க உள்ளது. எனவே எடப்பாடி தொகுதியிலும் தனது கொடி பறக்க வேண்டுமென முடிவெடுத்துள்ள விஜய் புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், விசில் சின்னத்தில் த.வெ.க சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். ஆனால், த.வெ.க தலைமையே எதிர்பார்காத ட்விஸ்ட் எடப்பாடி தொகுதியில் நடந்தேறியது. அந்த தொகுதிக்கு த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் வேட்புமனு முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் போனதால் நிராகரிக்கப்பட்டது.
அதோடு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த, அவரின் மனைவி மனுவும் உரிய தகவல் இல்லாமல் போனதால் நிராகரிக்கப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், த.வெ.க அங்கு போட்டியிட முடியவில்லை. ஏற்கனவே திட்டமிட்டு, தனது வேட்புமனுவில் உரிய தகவல்களை பதிவிடாமல் இருந்ததோடு,வேட்புமனு பரசீலனை அன்று வேட்பாளரும் மாயமாகிவிட்டார்.
“இந்த தொகுதியில் அ.தி.மு,க வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் போட்டியிடுவதால், த.வெ.கவினால் தனது வாக்குகள் பிரிந்துவிடாமல் இருக்கவே, அ.தி.மு.க தரப்பு அருண்குமாரை விலைக்கு வாங்கிவிட்டது“ என த.வெ.க-வினர் புலம்பி வருகிறார்கள்.
“எங்கள் தொகுதிக்கு சரியான வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இப்படி நடந்திருக்காது” என் த.வெ.க தலைமை நிர்வாகிகளிடம் குமுறியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நாம் களம் காண வேண்டுமென விஜய் தனது நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார். இதனால் புதிய யுக்தியை த.வெ.க தலைமை கையில் எடுத்துள்ளது.
த.வெ.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம், “தற்போது எடப்பாடி தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். அதில் தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் வேட்பாளர்களை தவிற பிற வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சைகளாக போட்டியிடுகிறார்கள்.
அதில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ள, பிரேம்குமார் என்கிற வேட்பாளரை த.வெ.க தரப்பு கையில் எடுத்துள்ளது. இந்த வேட்பாளரை த.வெ.க ஆதரவு பெற்ற வேட்பாளராக அறிவித்து, த.வெ.க நிர்வாகிகளை அவருக்கு பணியாற்ற சொல்ல போகிறார்கள். அதாவது எடப்பாடி தொகுதியில் மட்டும், விஜய் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் களமிறங்க போகிறார்.

பிரேம்குமாருக்கு ஒதுக்கப்டட் சுயேட்சை சின்னதுக்கு ஆதரவு கேடடு,த.வெ.க நிர்வாகிகள் வேலை செய்ய போகிறார்கள்” என்கிறார்கள். காரைக்குடி சுற்றுப்பயணத்தை முடித்து சென்னைக்கு விஜய் வந்தவுடன், இதற்கான அறிவிப்பு அறிக்கையாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் பிரேம்குமாரை விஜய் தரப்பு கையில் எடுத்த விவரம் அ.தி.மு.க முகாமிற்கு தெரிந்துவிட்டது. அங்கிருந்து பிரேம்குமாரை தொடர்பு கொண்டு, விஜய் ஆதரவுடன் களம் இறங்கவேண்டாம் என் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், த.வெ.க தலைமையிலிருந்தே பிரேம்குமாரை தொடர்பு கொண்டு விஜய்யிடம் போனில் பேச வைத்திருக்கிறார்கள். இந்த டீலிங் சுபமாக முடிந்திருப்பதால், 233 தொகுதியில் விசில் சின்னத்தில் நிற்கும் த.வெ.க, எடப்பாடியில் மட்டும் சுயேட்சை சின்னத்தில் களம் இறங்க தயாராகிவிட்டது என்கிறார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
