தவெக சார்பில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் வினோத், ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் விஜய்யை தத்ரூபமாக நேரில் கொண்டு வந்ததை போல செய்திருந்த பிரசாரம், இணையத்தில் பயங்கர வைரலாகியிருக்கிறது.

வினோத்தின் பிரசாரத்துக்கு விமர்சனங்களும் பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் அவரையே தொடர்புகொண்டு பேசினோம். அவர் பேசுகையில், ‘தளபதி எல்லா தொகுதிக்கும் நேரில் வருவார் என எதிர்பார்த்தோம். கும்பகோணம் தொகுதிக்கு வருவதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அனுமதி கிடைப்பதில் நிலவிய சிக்கல்களால் தளபதியால் திட்டமிட்டப்படி பிரசாரம் செய்ய முடியவில்லை. அதனால்தான் தொகுதியில் தளபதியின் இருப்பை காட்டும் வகையில் எப்படி பிரசாரம் செய்யலாம் என யோசித்தோம். சிலர் எல்.இ.டி ஸ்க்ரீன்கள் வழி பிரசாரம் செய்யலாம் என்றனர். ஆனால், அதில் எந்த தனித்துவமும் இல்லை. ஜவுளிக்கடை, நகைக்கடை என எல்லோருமே அதை செய்கிறார்கள். அதேமாதிரி, சிலையை வைத்து பிரசாரம் செய்யவும் எனக்கு விருப்பமில்லை. அதனால் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தேன்.

AI வழி எதாவது செய்யலாமா என நண்பர்களுடன் பேசினேன். அதில்தான் இந்த ஹாலோகிராம் ஐடியாவை பிடித்தோம். பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் உதவியோடு இதை சாத்தியப்படுத்தினோம். நேற்றுதான் முதல் முறையாக ஹாலோகிராமில் தளபதி பேசுவது போல ஏற்பாடு செய்து பிரசாரத்துக்கு எடுத்துச் சென்றோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் தனியாக பிரசாரம் செய்கையில் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிடுவார்கள். இப்போது தளபதியே நேரில் வந்ததைப் போல இருந்ததால் நின்று அவரின் பேச்சை ரசித்து கொண்டாடி கைத்தட்டிவிட்டு செல்கின்றனர். அந்த வீடியோவை போஸ்ட் செய்த உடனேயே இணையத்திலும் வைரலாகிவிட்டது. எங்கெங்கு இருந்தெல்லாமோ போன் செய்து பாராட்டினார்கள். தலைமை அலுவலகத்திலிருந்து அழைத்து, ‘எப்படி இந்த ஐடியாவை பிடிச்சீங்க. வாழ்த்துகள்’ என்று கூறினார்கள். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஒரு நாளைக்கு சில ஆயிரங்கள் ஆகிறது. அதனால் நேற்று ஒரு நாள் மட்டும் ஹாலோகிராம் பிரசாரம் செய்தேன். மீண்டும் கடைசி நான்கு நாள்கள் பிரசாரத்திற்காக ஹாலோகிராமை புக் செய்திருக்கிறேன்’ என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
