Sorting by

×

தேர்தல் நேரங்களில் அதிமுக மேடைகள் என்றால் அங்கே நிறைய எம்.ஜி.ஆர் களைப் பார்த்திருப்பீர்கள். எம்.ஜி.ஆர் போலவே தொப்பி, கண்ணாடி அணிந்து அவரைப் போலவே நடந்து பாட்டுப் பாடி ஆடி இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்பார்கள் அவர்கள்.

‘இவர்களெல்லாம் யார்’ என விசாரிக்கக் கிளம்பிய போதுதான் அமரன் எம்.ஜி.ஆர் நம் கண்ணில் சிக்கினார்.

பூர்வீகம் சென்னை என்றாலும் தற்சமயம் கத்தாரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் தொழிலதிபர். ‘தேர்தல் வந்தால் என்ன பிசின்னாலும் இங்க வந்திடுவேன். ஒரு ரவுண்டு வந்து ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்டுட்டு நானும் நெற்குன்றத்துல என் ஓட்டைப் போட்டுட்டு திரும்பக் கிளம்பிடுவேன்’ என்றவரிடம், ‘ஒரு டீ சாப்பிட்டபடியே பேசலாமா’ எனக் கேட்டோம்.

‘தாராளமா. ஆனா காசு நாந்தான் தருவேன். ஏன்னா கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரராத்தானே என்ன்னை பார்க்க வந்திருக்கீக’ என நிபந்தனை விதித்துவிட்டு டீ யை உறிஞ்சியபடியே பேசத் தொடங்கினார்.

amaran mgr with edapadi palanisamy

”நிறைய எம்.ஜி.ஆர்னு சொன்னீங்க. வாஸ்தம்தான். ஓரளவு வாத்தியார் போலவே உருவ ஒற்றுமை கொண்டவங்க. உருவ ஒற்றுமை இல்லாட்டிக்கூட அவர மாதிரி வேஷம் போட ஆசைப்படுறவங்கனு நிறையப் பேர் இருக்காங்க. அவங்கள்ல பொருளாதாரத்துல வீக்கா இருக்கிற சிலருக்கு கட்சி நிகழ்ச்சிகளில் கிடைக்கிற ஏதோவொரு தொகை உதவுது. ஆனா நான் ஆண்டவன் அருளால் நல்ல வசதியோடயே இருக்கேன்.

இந்த வேஷம் போட ஆரம்பிச்சது தற்செயலா நிகழ்ந்தது. கோயம்புத்தூர்ல ஏதோவொரு ஷூட்டிங் ஸ்பாட். என்னுடைய ஃபிர்ண்டு ஒருத்தன் அதுல நடிச்சான். அவனைப் பார்க்கப் போயிருந்தேன். அங்க இருந்த ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கிட்ட பேசிட்டிருந்தப்ப‌ தன் குடும்பத்தின் வறுமைக் கதையச் சொல்லி நல்லா சாப்பிட்டு பல நாளாச்சுனு சொன்னார். எனக்கு கேக்கவே சங்கடமா இருந்தது. அந்த இடத்துலயே உடனே ஒரு சாப்பாடு வரவழைச்சு அவருக்குக் கொடுத்தேன்.

சினிமாவுல எம்.ஜி.ஆர் ஒருத்தர்தான் இப்படி செய்வார். அவருடைய நிறையப் படங்கள்ல நான் நடிச்சிருக்கேன்னு சொன்ன அந்த ஆர்ட்டிஸ்ட், ‘நீங்க ஒரு சாயலுக்கு எம்.ஜி.ஆர் மாதிரியே இருக்கீங்க. கருப்பு கண்ணாடியும் தொப்பியும் மட்டும் வாங்கி மாட்டுங்க, நீங்களும் எம்.ஜி.ஆர்.தான்’னு சொன்னார்.

பக்கத்துல இருந்த என் நண்பன் அன்னைக்கு சாயங்காலமே எங்கோ இருந்து தொப்பி, கண்ணாடி வாங்கிட்டு வந்துட்டான்.

amaran mgr

மறுநாள் கோயம்புத்தூர்ல நாங்க தங்கியிருந்த லாட்ஜை விட்டு அந்தக் கண்ணாடி, தொப்பி ரெண்டை மட்டும் மாட்டிகிட்டு வேஷ்டி சட்டை கூட இல்லாம ஜீன்ஸ் பேன்ட்லதான் வெளியில வந்தேன். அவ்வளவு கூட்டம். எனக்கே சிலிர்த்திடுச்சு. ஒரு மனுஷன் மறைந்து பல வருஷமாகியும் அவருடைய அடையாளத்தைப் பார்த்தாலே பக்கத்துல வர்றாங்கன்னா, எத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து போயிருக்கார்னு நினைச்சப்ப இந்த அடையாளத்து மேல எனக்குத் தனி மரியாதை வந்திடுச்சு.

பிறகென்ன, அப்ப இருந்து இந்த வேஷத்தைப் போட ஆரம்பிச்சுட்டேன். ஆனா மேடையில் ஆட பாட மாட்டேன். பொன்மனச் செம்மல்ங்கிற பெயரில் அறக்கட்டளை வச்சிருக்கேன். அது மூலமா யாருக்காவது ஏதாவது உதவிகள் செஞ்சா அப்ப போடுவேன். தேர்தல் வந்தா அவர் உருவாக்கின கட்சிக்காக இப்படி மாறுவேன்.

அங்கங்க என்னை இப்படி பார்த்தவங்க மூலமா கட்சிக்காரங்க தொடர்பு கொண்டாங்க. என்னைக் கூப்பிட்டு உறுப்பினர் கார்டை என் கையால் வாங்குறது, கட்சி கொடி ஏத்தி வைக்கச் சொல்றதுனு என்கரேஜ் செய்தாங்க. எடப்பாடி பழனிசாமி ஐயா வீட்டுக்கு ரெண்டு தடவை போயிருக்கேன். இதுக்கு முந்தைய தேர்தல்கள்லயும் பிரசாரம் செய்திருக்கேன்.

amaran mgr

இதோ இந்த தேர்தலுக்கு வந்துட்டேன். மதுரவாயல் தொகுதியில் ஒரு ரவுண்ட் போய் வந்தாச்சு. அடுத்து ஜெயக்குமார் தொகுதிக்கு போக வேண்டியிருக்கு” என்றவரிடம், கட்சியே அதிகாரபூர்வமாக அழைக்குமா அல்லது அந்தந்த வேட்பாளர்கள் கூப்பிடுகிறார்களா எனக் கேட்டோம்,

“வேட்பாளர்கள் கூப்பிடுவாங்க. கட்சி அதிகாரபூர்வமாக கூப்பிடுவதில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு. நான் இந்த மாதிரி வந்து ஓட்டு கேட்பதற்கு கட்சியிடம் சம்பளம் வாங்குவதில்லை. ரெண்டு காரணம்தான் ஒண்ணு நான் ஓரளவு வசதியாகவே இருக்கேன். ரெண்டாவது புரட்சித்தலைவர் வேஷத்தைப் போட்டுகிட்டு அவர் உருவாக்கின கட்சிக்கு வேலை செய்துட்டு கூலி கேக்கறது தப்புனு நினைக்கிறேன்.

அதனால கட்சியினர் விரும்பிக் கொடுத்தா மட்டும் வாங்கிக்கிடுவேன்” என்றவருக்கு சில தினங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் அணிந்திருந்த தொப்பியும் கண்ணாடியும் கிடைத்திருப்பதுதான் பெரிய சர்ப்ரைஸாக இருந்ததாம்.

“தலைவரின் உதவியாளர் மறைந்த மகாலிங்கத்தின் குடும்பம் எனக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். மகாலிஙக்த்தின் மனைவி சில தினங்களுக்கு முன் எனக்குப் பேசினாங்க. ‘அடுத்த முறை சென்னை வரும் போது வீட்டுக்கு வாங்க, உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு’னு சொன்னாங்க. எனக்கு கணிக்க முடியலை.

இப்ப சென்னை வந்ததும் நேரா அவங்க வீட்டுக்குதான் போனேன். அங்க போனா அவங்க வீட்டுல இருந்த அந்த தொப்பி, கண்ணாடி ரெண்டையும் எங்கிட்ட கொடுத்து, `தலைவர் ஞாபகமாக இருக்கட்டும்னு வச்சிருந்தார் என் கணவர். ஆனா இது எங்ககிட்ட இருக்கிறத விட உங்க கிட்ட இருந்தா காலத்துக்கும் பத்திரமா இருக்கும்னு தோணுச்சு. அதனால எடுத்துக்கோங்க’னு சொல்லித் தந்துட்டார்.

எனக்கென்னவோ அவரே எனக்குக் கொடுக்கச் சொன்ன மாதிரிதான் நினைக்கத் தோணுது”’ என நெகிழ்கிறார் அமரன் எம்.ஜி.ஆர்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *