Sorting by

×

அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “எம்.எல்.ஏ. ஐயப்பன் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேசியது, தி.மு.க.வில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழுக்குக் கலங்கம் ஏற்படுத்தும் விதமாகப் பேசியதை கோடானுகோடி தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஓ.பி.எஸ் மக்கள் பணியாற்ற வேண்டும் என இன்னொரு கட்சிக்குக் கூட செல்லலாம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக்கிய கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக, 2017ல் தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் நண்பர் ஓ.பி.எஸ்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

இருப்பினும், ஓ.பி.எஸ்ஸைப் பெருந்தன்மையாக பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டு, அண்ணன் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி துணை முதல்வராகக் கொண்டு வந்தார். இன்றைக்கு பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். ஓ.பி.எஸ்ஸை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யும் போது கட்சியின் சட்டத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

ஓ.பி.எஸ், தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார். அவர் தி.மு.க-வில் சேரட்டும், பதவிக்கு வரட்டும், வராமலும் போகலாம். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் விளைவிப்பதை மன்னிக்க முடியாது.

உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். ஓ.பி.எஸ், ஐயப்பன் இருவரும் பேசியதை, துரியோதன கும்பல், முதல்வர் கைத்தட்டி ரசித்து புன்முறுவலாக இருந்தார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருக்கும் இதைவிட தீங்கை யாரும் இழைக்க முடியாது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி, பணநாயகத்தால் எப்படியாவது வென்றுவிடலாம் என நினைத்தவர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமை பெற்று, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்ட பிறகு தி.மு.க அச்சமடைந்து அவசரக் கதியில் ரூ.5,000 கொடுத்துள்ளனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வளர்ச்சி நிதி ரூ. 11,000 கோடியை மாற்றியுள்ளனர். 50 ஆயிரம் அல்ல, வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. உறுதியாக தமிழக மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இந்தப் பயத்தினால்தான் கேச்சர்ஸ் போல பல கட்சிகளில் இருந்து தி.மு.க-வுக்குப் பிடித்து வருகின்றனர். இதை அரசியல் ராஜதந்திரம் எனப் பலரும் பேசுகிறார்கள். பணநாயகத்திற்கான வெற்றியே தவிர பொதுநலனுக்கான வெற்றி அல்ல. ஓ.பி.எஸ் தன்னை தர்மராக நினைத்து 1.0 எனத் தர்மயுத்தம் நடத்தினார்.

இதை குருமூர்த்தி சொன்னதால்தான் செய்தேன் என்றார். இதில், சுயபுத்தி இல்லை எனத் தெரிகிறது, தர்மயுத்தம் 2.0-வை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் தங்கபாண்டியன் சொன்னதால் தொடங்கியதாக ஓ.பி.எஸ். கூறினார்.

தற்போது 3.0-வை யார் சொல்லித் தொடங்கினார் என்பது தெரியவில்லை. இது ஓ.பி.எஸ்-க்கு நல்ல பாடமாகும். தர்மயுத்தம் தர்மர் நடத்த வேண்டும்; அதர்மவாதி நடத்தினால் அதர்மத்தில்தான் முடியும். துரியோதரன் கூட்டத்தில், ஓ.பி.எஸ் சென்று சேர்கிறார்கள்.

சட்டமன்ற, ராஜ்யசபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் ஒரணியில் இணைந்து, எங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து, ஜெயலலிதாவின் ஆட்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என உள்ளோம்.

தங்களுக்கு பதவி இல்லை என்பதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஜெயலலிதாவின் கட்சியை ஒன்றிணைப்பேன், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவேன் எனச் சொன்னவர்கள் எல்லாம் திடீரெனக் கிளம்பி டம்மி வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். இன்னும் டம்மியாக சிலர் தி.மு.க-வுக்குச் சேவை செய்யவும் கிளம்பிவிட்டனர்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாதான் தெய்வம்; ஆட்சி வேண்டும், கட்சியை ஒன்றிணைப்போம் எனக் கூறியவர்கள் எல்லோரும் தி.மு.க.வின் ஏஜென்ட்களாகச் செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருகிறது.

ஒரு கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய ஆறு மாதங்கள் ஆகும்; மூன்று மாதங்களில் முடியாது. எனவே யாராவது கட்சி ஆரம்பிப்பேன் என்றால் யாரும் ஏமாற வேண்டாம். இன்னொரு கட்சியில் இருந்து ஆட்களைப் பிடித்து வேட்பாளராக தேர்தலில் நிறுத்துவது விந்தையாகும். ஓ.பி.எஸ். பரதனாகக் காட்டினார்; இன்னும் சிலரின் சுயரூபம் விரைவில் வெளிப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை பேசவில்லை. எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குச் செல்வார்கள். கஞ்சா, ஊழல் புகழ் தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வர அமித்ஷா முயற்சி செய்து வருகிறார். போலீஸார் கஞ்சா விற்கிறார்கள், வெளிநாட்டிலிருந்து குண்டு வைப்பது போல ஆட்சியாளர்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது.

அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் தி.மு.க-வின் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வழக்கில் வரும் என்பதால் அமைச்சர் நேருவைப் பாதுகாக்க நினைக்கிறார்கள்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *