கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் தெற்கு சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்த அனுபவத்தைப் பாடமாக வைத்துக்கொண்டு தமிழக நீர்வளத் துறை, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. குறிப்பாக தெற்கு சென்னைப் பகுதிகளில்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது நீர்வளத்துறை.
சென்னையில் பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் – நவம்பருக்குள் சென்னை மாநகரில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முக்கிய அதிகாரிகளுக்கு ஷிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியிருந்தார்.
நீர்வளத்துறை மூத்த அதிகாரி கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 4000 நீர்நிலைகள் உள்ளன. இதில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கையில் 1000 நீர்நிலைகள் பங்கு வகிக்கும். எனவே, உடனடியாக 900 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படும்.
தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் நடைமுறை முடிவுக்கு வந்ததும், இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, இதற்கான நிதி ஒதுக்கப்படும். தென்சென்னை பகுதிகளில் மழைநீர்வடிகால்வாய்கள் அமைக்கும் பணியை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை நடத்திய ஆய்வில், 27 துண்டிக்கப்பட்ட கால்வாய் இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஊரப்பாக்கம், முடிச்சூர் போன்ற 9 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்றன.
அன்று இமயமலை, இன்று குமரி முனை! மோடியின் தியானக் காட்சிகள்!
மழைநீர் வடிகால்வாய்கள் சரியாக இருந்தால், லேசான மழை பெய்தால் வெள்ளம் தேங்காமல் பார்த்துக்கொள்ளும். ஆனால், மழைநீர் வடிகால்வாய் மட்டுமே போதுமானது அல்ல. இயல்பு அளவை தாண்டி கனமழை பெய்யும்போது வெள்ளத்தை தடுக்க கூடுதல் நடவடிக்கை வேண்டும் என்பதால், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பருவமழையை அரசுகளால் மேலாண்மை செய்ய இயலாது. ஆனால், பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கனமழையின்போது வெள்ளம் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். பல்வேறு நாடுகளும் தண்ணீர் தேவை மற்றும் வெள்ளக் காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்காத்துக் கொள்கின்றன.
திட்டமிடப்படாத நகர வளர்ச்சி, சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு கட்டுமானங்கள், நீர்நிலைகளின் சுழற்சியை தடுத்துவிட்டன. சென்னை மாநகர திட்ட வாரியம், சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை உள்ளிட்டவை இணைந்துதான் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இவற்றை ஒருங்கிணைக்க தனியாக அமைப்பு உருவாக்கப்படும். ஆறுகளின் முகத்துவாரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து அகலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
