Sorting by

×

கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டால், கணவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஜீவனாம்சம் கொடுக்கும் கணவன் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வருமானம் இல்லாமல் போய்விடும்.

ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் தீர்ப்பு, இதற்கு தீர்வு கண்டுள்ளது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், “மனைவியைப் பராமரிக்க வேண்டியது கணவனின் கடமையாகும். தம்பதிகள் பிரிந்திருக்கும் சூழ்நிலைகளில், மனைவி குற்றவியல் சட்டத்தின் மூலமாகவோ அல்லது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் உள்ள பராமரிப்பு விதிகளின் மூலமாகவோ பராமரிப்பு கோரலாம்.

இருப்பினும், ஓர் ஆணின் இந்தப் பராமரிப்பு கடமை அவரின் மரணத்திற்குப் பிறகும் தொடர்கிறது. ஏனெனில், சட்டமானது ஒரு கைம்பெண் தன்னுடைய மாமனாரிடம் இருந்து பராமரிப்பு கோர அனுமதிக்கிறது” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து

மேலும், “இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956-இன் பிரிவு 19-இன் படி, ஒரு கைம்பெண் மருமகள் தன்னுடைய மாமனாரிடம் இருந்து பராமரிப்பு கோரலாம். ஆனால் அதற்கு தனது சொந்த வருமானம் அல்லது பிற சொத்துக்கள் மூலம் தன்னைப் பராமரித்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே, இது போன்று மாமனாரிடமிருந்து அவர் இந்த உரிமையைப் பெற முடியும்.

அதோடு அவரால் தன்னுடைய மறைந்த கணவரின் சொத்தைப் பெற முடியாமலும், தன்னுடைய தாய், தந்தை ஆகியோரிடமிருந்தும் பராமரிப்புத் தொகை பெற முடியாமலும் இருக்க வேண்டும். மேலும், மாமனாரிடம் அந்தப் பராமரிப்பை வழங்கக்கூடிய அளவிற்கு சொத்து இருக்க வேண்டும். மருமகள் மறுமணம் செய்துகொண்டால், இந்த பராமரிப்பு கோரும் உரிமை ரத்தாகிவிடும்” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து இத்தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *