Sorting by

×

சென்னை கோடம்பாக்கத்தில் ‘அக்கா கடை’ என்கிற பெயரில் மளிகைக் கடை வைத்திருப்பவர் காளிராஜன் . சிவகாசியைச் சேர்ந்த இவர், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து சிறிய அளவில் அந்த மளிகைக் கடையைத் தொடங்கினார். இன்று வரை நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் பொன் சங்கர பாண்டியன். அரபு நாடான பஹ்ரைனில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்.

அமெரிக்க – ஈரான் போரில் ஐநூறு மீட்டர் தூரத்தில் கண் முன்னே ட்ரோன் தாக்குதலைக் கண்ட சங்கர பாண்டியனின் குடும்பம், அந்த திகிலுடனேயே பல சிரமங்களுக்கு மத்தியில் சென்னை வந்து சேர்ந்திருக்கிறது.

கோடம்பாக்கத்திலுள்ள சங்கரபாண்டியனின் வீட்டில் அவரைச் சந்தித்தோம்.

pon sankara pandian with his mother

”டிப்ளமோ மெக்கானிக் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு இந்தியாவுலயே சில வருடங்கள் வேலை பார்த்திட்டிருந்தேன். முதல்ல வெளிநாடு போய் வேலை பார்க்கக் கூடாதுங்கிற மனநிலையில இருந்தவன். ஆனா இங்க இருந்த வரை, எவ்வளவுதான் கடின உழைப்பைப் போட்டாலும் பெரிய சம்பளம், பதவி உயர்வு ரெண்டுமே உரிய நேரத்துல கிடைக்கறதில்லைனு தோணுச்சு.

கூடப் படிச்ச நண்பர்கள் சிலர் வெளிநாடுகளுக்குப் போய் நல்ல நிலையில அவங்க வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினதையும் பார்த்ததுல மனசு மாறிடுச்சு. 2008ம் வருஷம் பஹ்ரைன் போனேன். சில வருஷங்கள் வேறொரு நிறுவனத்துல வேலை பார்த்துட்டு பிறகு இப்ப ஒர்க் பண்ணுகிற ‘பஹ்ரைன் ஸ்பெஷல் டெக்னிக்கல் சர்வீசஸ்’ங்கிற‌ கம்பெனியில சேர்ந்தேன்.

ஆயில் ரிஃபைனரியில பெரிய நிறுவனம் இது. கல்ஃப் நாடுகள் முழுக்க கிளைகள் இருக்கு. பஹ்ரைன் கிளையில நான் வேலை பார்க்கிறேன். கத்தார், ஓமன் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு பர்ச்சேஸ் இன்சார்ஜ் பொறுப்பு.

முதல்ல நான் மட்டுமே அங்க இருந்து வேலை பார்த்தேன். நல்ல வேலை , நல்ல சம்பளம்கிறதால ஒருகட்டத்துல மனைவி மகனையும் கூட்டிட்டுப் போயிட்டேன். எனக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் இங்க குஜராத்தில் மருத்துவம் படிக்கிறான், நான், மனைவி இளைய மகன் மூணு பேரும் இப்ப பஹ்ரைன்ல இருக்கோம்.

அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் தங்களுடைய மளிகைக்கடையை விட மனசில்லை. ‘இட்லிக் கடை’ படத்தின் கதையைப் போல அவங்க அந்தக் கடையை சென்டிமென்ட்டா நினைக்கிறதால, அவங்களுக்கு முடிகிற வரை நடத்தட்டும்னு விட்டுட்டேன்” எனத் தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றி அறிமுகம் செய்தவரிடம், போர் குறித்துக் கேட்டதும், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்..

Iran – Israel war

”இந்தப் போர் குறித்து பஹ்ரைன் அரசுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே உறுதியான தகவல் கிடைச்சிருக்கு. அதனால எல்லாருக்கும் மொபைல்ல அலாரம் ஒலிக்கிற மாதிரி எச்சரிக்கை தந்தாங்க. வெளியிலும் சைரன் எச்சரிக்கை தந்து அந்த ஒலியைக் கவனிச்சு என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாதுங்கிற டிப்ஸ் தந்தாங்க.

ஆங்காங்கே பதுங்கு குழிகள் ஸ்டைலில் பேஸ்மென்ட் இடங்கள் அமைச்சு அது குறித்த விபரங்களைத் தெரிவிச்சிருந்தாங்க.

ஆனாலும் சண்டையெல்லாம் வராதுங்கிற ஒரு மனப்பான்மை அங்க மக்கள்கிட்ட இருந்தது. ஏன்னா, என் அனுபவத்துல சொல்றேன், மத்த கல்ஃப் நாடுகளை விட பஹ்ரைன் மக்கள் ரொம்ப அன்பானவங்க.. அமைதியை விரும்பறவங்க. அதனால், நம்மை எதுக்கு அட்டாக் செய்யப் போறாங்கன்னு, நினைச்சிருப்பாங்கன்னு தோணுது.

ஆனா பிப்ரவரி கடைசி வாரம் போர் தொடங்கின அடுத்த ரெண்டு மணி நேரத்துலெல்லாம் பஹ்ரைனில் பதற்றம் உருவாகிடுச்சு. அமெரிக்க படைகள் இருக்குமிடம், அமெரிக்க தூதரகம் இருக்குமிடங்களில் ஹை அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுச்சு.

pon sankarapandian family

இங்கதான் எங்களுக்கும் சிக்கல். எங்க வீடு அமெரிக்க படைகள் இருக்குமிடத்துக்கு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருக்கு. அதுவும் ஆறாவது மாடி. தரைத் தளங்களில் வசிப்பவர்களை விட உயரமான அடுக்குமாடி கட்டடங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையா இருக்கச் சொல்லி ஏற்கெனவே அலர்ட் செய்திருந்தாங்க.

உடனடியா எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. என்னுடைய நிறுவனம் வீட்டுல இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு. அதனால சில நாள்கள் அங்க போய் தங்கிடலாம்னு நாலு பேக்ல அடிப்படைத் தேவையா இருக்கிற பொருள்களை எடுத்துகிட்டு காரை எடுத்துகிட்டு கிளம்பிட்டோம். பாதி தூரம் போயிருப்போம், திடீர்னு எங்களுக்கு முன்னாடி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துல வானத்துல விருட் விருட்னு கிராஸ் செய்யுது. ஒரு பக்கத்துல இருந்து போனதைப் பார்த்த பயணிகள் அப்படியே அதிர்ச்சியில ரோட்டுலயே அங்கங்கே நின்னுட்டாங்க.

காருக்குள் இருக்கிறது பாதுகாப்பா… இல்ல, இறங்கி எங்காவது ஓடறது பாதுகாப்பானு தெரியாத சூழலில் காரில் இருந்த மனைவி மகன் ரெண்டு பேரும் ரொம்பவே பயந்துட்டாங்க.

அடுத்த சில வினாடிகள்ல சீறிப்பாய்ஞ்ச அதே ஆயுதங்கள் ரிவர்ஸ் வருது. அடுத்த சில நிமிடங்களில் அது ட்ரோன்களை எதிர்த்து தாக்குகிற இன்டர்செப்டர்னு அறிவிச்சு பீதியைப் போக்குனாங்க.

ஈரான் போர்
ஈரான் போர்

சில வினாடிகளில் சப்தநாடியும் அடங்கிப் போன மாதிரி ஃபீலிங். பிறகு ஒரு வழியா கம்பெனிக்குப் போயிட்டோம். அங்க நாலு நாள் இருந்துட்டு மறுபடி லேசா தைரியத்தை வரவழைச்சுகிட்டு வீட்டுக்கு வந்தோம்.

ஆனாலும் வெடிச் சத்தம் ராத்திரி, பகல் இல்லாம கேட்டுகிட்டே இருந்தது. ராத்திரி தூங்கறப்ப கூட பேன்ட் சர்ட்லாம் போட்டபடி. எப்பவும் ரெண்டு பேக் ரெடியா எடுத்து வச்சிட்டுதான் தூங்கப் போவோம். ஏதாவது ஒண்ணுன்னா தப்பிக்கணும்கிற ஏற்பாடுதான். காரை வீட்டுக்கு வெளியில பார்க் பண்ணி தயாரா வச்சிருந்தோம். ஒருநாள் திடீர்னு பெரிய சத்தம். கட்டங்கள் ஷேக் ஆச்சு. எழுந்து ஜன்னலைத் திறந்து பார்த்தா வானத்துல தீ, புகை அக்கம்பக்கத்துல வெடித்துச் சிதறுன பொருள்களின் துண்டுகள் விழுகிற சத்தம். பிறகு எப்படி தூக்கம் வரும்?

மறுநாள் காலை எழுந்ததும் ஊருக்குக் கிளம்பிடலாம்கிற முடிவுக்கு வந்துட்டோம். பஹ்ரைன் ஏர்போர்ட் மூடிட்டாங்க. சௌதி வரைக்கும் பஸ்ல வந்து அங்கிருந்து ஃபிளைட் ஏறினோம். விசா ஃபார்மாலிடிஸ்லாம் முடிஞ்சு ஃபிளைட் ஏறின பிறகு கூட பயம் விலகலை. ஏன்னா ஃபிளைட் பறக்கிற ரூட் எல்லாம் கூட ரிஸ்க்கான ஏரியாதான். ஆனா ஃபிளைட்டை தரையில இருந்து மேலெம்பிய அடுத்த சில வினாடிகள்லயே ரொம்ப உயரத்துக்கு கொண்டு போயிட்டாங்க. எப்படியோ ஒருவழியா இந்திய வான்வெளிக்குள் நுழையற வரைக்குமே எங்க யாருக்குமே தூக்கமில்லை. ஒருவழியா பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்”’ என்ற சங்கரபாண்டியனிடம், ‘அடுத்து எப்போ பஹ்ரைன் திரும்பணும்’ என்றோம்.

pon sankarapandian

“ஈரான் தாக்குதலைப் பொறுத்தவரை பொது மக்கள் மீது குறி வைக்கலை. அதனால வெளியில எங்கும் நடமாடாம வீடு அதை விட்டா ஆபீஸ்னு இருக்கச் சொன்னாங்க. பையனுக்கு ஸ்கூல் தொடங்கிடுச்சு. ஆன்லைனில் படிக்கிறான். எனக்கு சில நாள்கள் விடுமுறை இருக்கு. அது முடிஞ்சதும் நான் மட்டும் முதல்ல போகலாம்னு இருக்கேன்.

சண்டை இப்ப தற்காலிகமா நிறுத்தப்பட்டதுல கொஞ்சம் நிம்மதி கிடைச்சிருக்கு. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து நிரந்தரமா போர் முடிவுக்கு வரணும்கிறதுதான், பஹ்ரைன் மக்கள் மட்டுமல்ல இந்த தேதிக்கு உலகம் மக்கள் எல்லாருடைய விருப்பமும். நல்லதே நடக்கும்னு நானும் நம்புறேன். அமைதி திரும்பிடுச்சுன்னா அடுத்த நாளே குடும்பத்தைக் கூட்டிட்டுப் போயிடுவேன்” என்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *