Sorting by

×

காங்கிரஸ் கட்சியிலிருந்து அழைப்பு… நாளைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யணும் உடனடியா நீங்க சென்னைக்கு கிளம்பி வரணும்,

சுற்றியிருந்த நண்பர்களே ஐதராபாத்திலிருந்து ஃப்ளைட் டிக்கெட் போட, செலவுக்கு எவ்வளவு பணம் ஏதும் வேண்டுமா எனக் கேட்க, இல்ல என் அக்கவுண்ட்ல 2000 இருக்கு போதும் பாத்துக்கலாம் என சென்னைக் கிளம்பி வந்து சேர்ந்திருக்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்டோபர் திலக். இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன் என பலர் ராஜ்யசபா சீட்டைப் பிடிக்கும் முயற்சியில் களமிறங்க, காங்கிரஸ் தலைமையின் சாய்ஸாக கிறிஸ்டோபர் திலக்கே இருந்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைமை, கட்சியில் இருக்கும் யாராவது ஒருவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். அதிருப்தியை ஏதொவொரு வகையில் வெளிப்படுத்துவார்கள். ஆனால், கிறிஸ்டோபர் திலக் என்கிற பெயர் அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் அவரின் பெயர் புதிதாக இருந்திருக்கலாம்.

ஆனால், கேரளா, ஆந்திரா, வட கிழக்கு மாநிலங்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டு மழையைப் பொழிகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். யார் இவர் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கும்போது, ஆச்சர்யப்படுத்தும் பல தகவல்களை அள்ளித் தருகிறார்கள்.

யார் இவர்?

திருச்சி தற்போது வசிக்கும் ஊராக இருந்தாலும் தாராபுரம்தான் கிறிஸ்டோபர் திலக்கின் சொந்த ஊர். இவரின் தந்தை காமராஜர் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசியர் மாணிக்கம். தமிழ்நாட்டின் வரலாறு குறித்து பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

மதுரையில் வசித்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுப் பக்கத்து வீடுதான் திலக்கின் வீடு. பள்ளி, கல்லூரிப் படிப்பு எல்லாம் மதுரையில்தான். தியாகராஜா கல்லூரியில் பொறியியல், மேலாண்மை போன்ற படிப்புகளை முடித்தவர், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்டில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து முனைவர் பட்டத்துக்கான ஆய்வையும் மேற்கொண்டு வருகிறார்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நட்பு…

வெளிநாடுகளில் கார்மண்ட் இன்ஸ்டஸ்ரியில் வேலை பார்த்து வந்தவர், அந்த வேலையை உதறிவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேயின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார். தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களுள் ஒருவராக இருக்கிறார்.

அடிப்படையில் காந்தியக் கொள்கையின்மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், அரசியல் ரீதியாக அவருக்கு அரசியல் குரு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி என்கிறார்கள்.

உம்மன்சாண்டி

கேரளாவில் கட்சி சார்ந்து சில பணிகளை மேற்கொண்டபோது அவருக்கு நெருக்கமாகியிருக்கிறார். தன்னுடைய மகன் சாண்டி உம்மனைப்போல கிறிஸ்டோபர் திலக்கையும் பார்த்துக்கொண்டார் உம்மன்சாண்டி என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லும் தகவல்.

காங்கிரஸ் கட்சித் தலைமை உம்மன் சாண்டியை ஆந்திராவுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமித்தபோது, கிறிஸ்டோபர் திலக் உதவிக்கு வேண்டும் என கேட்டுப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

அவரின் மறைவுக்குப்பிறகும், ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை, ஒய்.எஸ் ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வந்ததில் திலக்கின் பங்கு முக்கியமானது என்கிறார்கள். அடுத்ததாக, ஒடிசா மாநிலத்திலும் தேர்தல் பொறுப்பாளராக வேலை பார்த்திருக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக…

தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக, குறிப்பாக மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் பணியாற்றி வருகிறார். வடகிழக்கு மாநிலங்களுக்கு பொறுப்பாளராகச் செல்ல, கட்சியில் பலர் தயங்கிய நிலையில், தானாக முன்வந்து சென்றிருக்கிறார். மக்களோடு மக்களாக தங்கி வேலை செய்வது இவரின் சிறப்பு என்கிறார்கள்.

பாடகர் – ஹாக்கி ப்ளேயர்

அரசியலைத்தாண்டியும் பல திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் திலக். இவரின் அம்மா வழி தாத்தா திருச்சி ஆல் இன்டியா ரேடியோவில் ‘ஏ’ கிரேட் ஆர்டிஸ்டாக இருந்தவர். அந்தவகையில், கிறிஸ்டோபர் திலக்கும் முறையாக கர்னாடிக் சங்கீதம் பயின்றவர். மிகச்சிறந்த பாடகர் என்பது அவரின் சமூக வலைதளப் பக்கங்களைப் பார்த்தாலே தெரிகிறது.

அதேபோல, தியாகராஜா கல்லூரியில் படிக்கும்போது, மாநில அளவில் ஹாக்கி போட்டிகளிலும் பங்குகொண்டவர் என்கிறார்கள்.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் காந்தியக் கொள்கைகளை மிகத் தீவிரமாகப் பின்பற்றுபவர்களில் ஒருவர் என கிறிஸ்டோபர் திலக்கைக் குறிப்பிடுகிறார்கள்.

எளிமையான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிப்பதாகச் சொல்கிறார்கள். அம்பேத்கர் மீதும் தீவிர ஈடுபாடு கொண்டவராகப் பார்க்கப்படுகிறார். தவிர, அறிவுசார் வட்டங்களில் அதிகளவில் மதிக்கப்படுவராக கிறிஸ்டோபர் திலக் இருக்கிறார். தவிர, மனித உரிமை சார்ந்த சமூக செயற்பாட்டளர் என்கிற அடையாளமும் அவருக்கு இருக்கிறது.!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *