திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
காரணம் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள்ளேயே பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன.
வேட்பாளர்கள் பட்டியல் வெளியானப் பிறகு காங்கிரஸில் உள்ள பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
எம்.பி ஜோதிமணியும், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, “காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல், தொண்டர்கள் மத்தியிலும், கட்சியில் உள்ள தலைவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் யாருக்கு சீட் கொடுத்தார்கள், யாருக்கு கொடுக்கவில்லை என்பது பிரச்னை கிடையாது. பிரச்னை என்னவென்றால் 25, 30 சீட்டுகள் மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் இந்த மாதிரி பிரச்னைகள் வரத்தான் செய்யும்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுக்காலமாக இது போன்ற பிரச்னைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. இப்போது யாரெல்லாம் அதிருப்தி தெரிவிக்கிறார்களோ இதே கதை தான் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இதற்கு தீர்வு என்னவென்றால் சீட்டுகளை அதிகமாக்குவது தான். காங்கிரஸ் மிகப்பெரிய ஒரு பேரியக்கம். அதனால் காங்கிரஸிற்கு தேவையான சீட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசியலைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கையில் எப்படி காங்கிரஸிற்கும், பாஜகவுக்கு கொடுத்த அளவிலான சீட்டுகளைக் கொடுக்க முடியும்.

காமராஜர் ஆட்சியை தான் மக்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸின் மதிப்பு தமிழ்நாட்டில் அதிகம். காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை. ஒரு பக்கம் சின்ன தோசையை கொடுத்தாங்க.. இன்னொரு பக்கம் கல்யாண விருந்து வைத்தே கூப்பிட்டாங்க. ஆனால் தலைமையின் முடிவு இது.
பல காரணங்களுக்காக இதற்கு ஒப்புக்கொண்டோம். பாஜகவிற்கு எப்போதும் தமிழகத்தில் இடம் கொடுக்கவே கூடாது. அதற்கு தான் இந்தத் தேர்தல்” என்று பேசியிருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
