காங்கிரஸ் – சமாஜ்வாதியும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
“காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். அவர்கள் புல்டோசர்களை எங்கு பயன்படுத்துவது, எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பயிற்சி எடுக்க வேண்டும்” என்று மோடி கூறினார்.
ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!
யோகி ஆதித்யநாத் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் குற்றவாளிகள் மற்றும் கலவரக்காரர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்ததால் அவரது ஆதரவாளர்களால் ‘புல்டோசர் பாபா’ என்றும் அழைக்கப்படுகிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. மறுபுறம், இந்தியா கூட்டணி குழப்பங்களை உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
