திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார்.

அதன்படி, சீமான் போட்டியிடக்கூடிய தொகுதியாக சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சீமானின் சொந்த மாவட்டம் என்பதனால் அந்த தொகுதியில் அவர் இந்த முறை போட்டியிடுகின்றார். ஏற்கனவே, கடந்த 2016 – ம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலும், 2021 -ம் ஆண்டு திருவெற்றியூரிலும் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தில் களம் காண்கின்றார்.
இதே போன்று, நாம் தமிழர் கட்சியினுடைய முக்கிய முகங்களாக பார்க்கக்கூடிய இடும்பாவனம் கார்த்தி வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்தியா ராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், 117 ஆண்களும், 117 பெண்களும் என ஆண்கள் பெண்கள் சம அளவில் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு திருநங்கைக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியில் ரோஷினி என்ற திருநங்கை போட்டியிட உள்ளார். தமிழக அரசியல் களத்தில் மற்ற கட்சி, கூட்டணிகள் இன்னும் தொகுதிகளையே பங்கிடாத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களையே அறிவித்திருப்பது, மற்ற கட்சிகளை உற்று கவனிக்க வைத்திருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
