Sorting by

×

கேரளா: “சட்டசபைத் தேர்தலில் 21 பாஜக MLA-க்கள் வெற்றிபெற வேண்டும்” – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆசை

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அதே காலகட்டத்தில் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.

கேரளாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் வியூகம் வகுத்து பா.ஜ.க இயங்கி வருகிறது. இதற்காக கேரளாவில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளின் பட்டியலைத் தயாரித்து களப்பணி செய்துவருகிறது பா.ஜ.க.

இதற்கிடையே கேரளாவில் 21 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்ற தனது ஆசையை மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கிப் பேசுவதற்காக கேரள மாநிலம் கொல்லத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சுரேஷ்கோபி கூறுகையில், “கேரளாவில் நிலம் ஒதுக்கீடு செய்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். ஆலப்புழாவில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என நான் கூறவில்லை. அதே சமயம் வளர்ச்சிப் பணிகள் அதிகமாகச் செயல்படுத்தப்படாமல் உள்ள ஆலப்புழாவில் எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும் என்பது 2015-ம் ஆண்டு முதல் எனது கருத்தாக உள்ளது.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இன்றைய சூழ்நிலையில் ஆலப்புழாவில் இடம் தரவில்லை என்றால் திருச்சூரில் இடம் வாங்கி எய்ம்ஸ் அமைக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை
எய்ம்ஸ் மருத்துவமனை

‘எய்ம்ஸ் வருமடா மற்ற மோனே’ என நான் கூறிய கருத்துக்குத் தவறான விளக்கம் அளித்து கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். என்னை விமர்சித்தவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதற்குப் பதில் மற்ற மோனே எனக் குறிப்பிட்டேன். தேர்தல் நெருங்குவதால் நான் பேசியதைத் திரித்து கூறுகின்றனர்.

வரும் சட்டசபைத் தேர்தலில் 21 எம்.எல்.ஏ-க்களையாவது பா.ஜ.க-வுக்கு மக்கள் கொடுத்தால் கேரளாவில் பெரிய மாற்றம் உருவாகும். இந்தச் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை.

சுரேஷ்கோபி
சுரேஷ்கோபி

சபரிமலையில் புதிய கொடிமரம் அமைத்த சமயத்தில் ஒரு பக்தர் மூன்றரை கிலோ தங்கம் வழங்கினார். அதில் எனது வியர்வையின் பங்கும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் நான் சிறிது தங்கம் காணிக்கையாக வழங்கினேன். என்னிடம் இருந்த 22 கேரட் தங்கத்தை 24 கேரட்டாக மாற்றி வழங்கினேன்.

கொடிமரத்தின் மேல் உள்ள வாஜி வாகனத்தில் (குதிரை வாகனம்) நான்தான் தங்கம் பதித்தேன். அப்போது நான் வழங்கிய தங்கத்திற்கு ரசீது வழங்கியிருப்பார்கள். நான் அந்த ரசீதைப் பாதுகாத்து வைக்கவில்லை” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *