கேரளா என்ற மாநிலப் பெயரை `கேரளம்’ என மாற்ற வேண்டும் என்பது கேரள மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று. 2023 மற்றும் 2024 ஆகிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒருமனதாக கேரளா என்ற மாநிலப் பெயரை கேரளம் என மாற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இன்னும் சில மாதங்களில் கேரள மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மத்திய அரசு கேரள அரசின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இனி என்ன நடக்கும்?
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 3 படி, ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான செயல்முறை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
கேரளாவை கேரளம் என மாற்றுவதற்கான மசோதாவை மத்திய அரசு குறிப்பாக உள்துறை அமைச்சகம் தயார் செய்து, குடியரசுத் தலைவரிடம் அனுப்பும். குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை கேரள சட்டமன்றத்திற்கு அனுப்புவார். இது அரசியலமைப்பின் பிரிவு 3-ன் proviso-ன் கீழ் கட்டாயமானது. சட்டமன்றம் தனது கருத்துக்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரிவிக்கும். அதன் பிறகு, மத்திய அரசு குடியரசுத் தலைவரின் பரிந்துரையைப் பெற்று, அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும். நாடாளுமன்றம் அதை நிறைவேற்றினால், முதல் அட்டவணையில் கேரளம் என்றப் பெயர் மாற்றம் பதிவாகும்.
ஏன் இந்தப் பெயர் மாற்றம்?
ஆகஸ்ட் 2023-ல், கேரளா பெயர் மாற்றம் குறித்து சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய பினராயி விஜயன், “மலையாளத்தில் நமது மாநிலத்தின் பெயர் கேரளம். நவம்பர் 1, 1956 அன்று மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன… மலையாளத்தை தாய்மொழியாகப் பேசும் மக்களுக்கு ஒருங்கிணைந்த கேரளம் என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்ட நாட்களிலிருந்தே வலுவாக இருந்து வருகிறது.
இருப்பினும், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை கேரளா என்று குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ், அதை கேரளம் என்று திருத்த அவசர நடவடிக்கைகள் தேவை” என்றார்.

கேரளம் என்ற பெயர் காலனித்துவ ஆட்சிக்கு முந்தையது. இந்தப் பெயருக்கான குறிப்புகள் கிமு 3-ம் நூற்றாண்டில் அசோகன் ஆணைகளில் “கேரளபுத்திரர்” என்றும், பண்டைய தமிழ் இலக்கியங்களில் “அகநாநுரு” என்றும் காணப்படுகின்றன.
சொற்பிறப்பியல் ரீதியாக, அறிஞர்கள் இதை “சேர்” மற்றும் “ஆலம்” (பகுதி) உடன் இணைக்கின்றனர், அதாவது கடலால் சேர்க்கப்பட்ட நிலம் எனப் பெயர் காரணத்தைக் குறிப்பிடுகின்றனர். சில வரலாற்றாசிரியர்கள் மாநிலத்தின் முக்கிய விவசாய விளைபொருளான “கேரம்” (தேங்காய்) இருப்பதால் அதை வைத்து காரணப் பெயராக உருவானது எனக் கருதுகின்றனர். ஆகமொத்தத்தில் அது கேரளா அல்ல கேரளம் என்பதுதான் சரியானது என வாதிடுகின்றனர்.
அதிருப்தியில் மம்தா:
கேரளம் போலவே, மேற்கு வங்கமும் தன் மாநிலப் பெயரை பங்களா எனப் மாற்ற வேண்டும் என 2016 முதல் பல சட்டமன்றக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பியிருக்கிறது. ஆனால் அதற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை
இது தொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்,“கேரளாவின் பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துகள். எத்தனை முறை முயன்றும் எங்கள் மாநிலத்தின் பெயர் மாற்ற மத்திய அரசு அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போதெல்லாம் இந்த பிரச்சினையை எழுப்பியிருக்கிறேன்.

ஆனால் எதுவும் நடக்கவில்லை. மேற்கு வங்காள எதிர்ப்பு காரணமாக அதை அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறேன். வங்காளத்தின் சின்னங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை அவர்கள் அவமதிக்கிறார்கள். தேர்தல்களின் போது தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே அவர்கள் ‘பங்களா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அவர்கள் மாநிலத்தின் பெயரை மாற்ற ஒப்புதல் அளிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேற்கு வங்கம் – பங்களா
முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தலைமையிலான மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம், 1999-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை “பஷ்சிம் பங்களா” அல்லது “பங்களா” என்று மாற்றுவதற்கு முதலில் முன்மொழிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011-ல் மம்தா பானர்ஜி முதல்வரான பிறகு, மாநிலத்தின் மாற்றுவதற்கு மாநில அரசு முன்மொழிந்தது. அதையும் மத்திய அரசு நிராகரித்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-ல், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மீண்டும் ஒரு பெயர் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. ஆங்கிலத்தில் “வங்காளம்”, வங்காளத்தில் “பங்களா” மற்றும் இந்தியில் “பங்களம்” என்று பரிந்துரைத்தது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜியின் அதிருப்தி வந்திருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
