Sorting by

×

கன்னியாகுமரி மாவட்டதில் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில் கடந்த மூன்று பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி வெற்றிபெற்றார். விஜயதரணி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வென்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளும் காங்கிரஸ் வசம் உள்ளன. குளச்சல் தொகுதியில் பிரின்ஸ், கிள்ளியூரில் ராஜேஷ் குமார், விளவங்கோட்டில் தாரகை கத்பர்ட்டும் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். இந்த நிலையில் நடைபெற உள்ள 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக இருக்கும் ராஜேஷ்குமாருக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக மூன்று முறை வென்று எம்.எல்.ஏ-வாக உள்ள பிரின்ஸுக்கு நான்காவது முறையாக வாய்ப்பு வழங்கக் கூடாது என கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. அதனால் பிரின்ஸுக்கு இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்

விளவங்கோடு சிட்டிங் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் குளச்சல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ-வாக உள்ள விளவங்கோடு தொகுதியில் டி.டி.பிரவீன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டி.டி.பிரவினுக்காக தாரகை கத்பர்ட் குளச்சலுக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.டி.பிரவீன் தென் கேரளா சி.எஸ்.ஐ சபை செயலாளராக உள்ளார். இதற்கு முன்பு பங்குபேரவை கமிட்டி உறுப்பினராகவும், காரக்கோணம் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி கண்காணிப்புக்குழு உறுப்பினராகவும், பங்குபேரவை நிர்வாகக்குழு செயலாளராகவும் பதவி வகித்திருக்கிறார். கேரளாவில் முழுமையாக செயல்படும் டி.டி.பிரவீனுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது எப்படி என காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். இது குறித்து விவரப்புள்ளிகள் கூறுகையில், “டி.டி.பிரவீன் கேரளா எல்லையில் உள்ள காரக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர். காரக்கோணம் கிராமத்தில் ஒரு பகுதி கேரளாவிலும், மற்றொரு பகுதி தமிழ்நாட்டிலும் வருகிறது. டி.டி.பிரவீனுக்கு தமிழ்நாட்டில் முகவரி, வாக்கு போன்றவை இருந்தாலும், அவரது செயல்பாடுகள் முழுவதும் கேரளாவில் உள்ளது.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ

கேரள மாநில சட்டசபை தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. 2 முறை தொடர்ச்சியாக சி.பி.எம் அங்கு ஆட்சியை பிடித்ததால், இந்த முறை எப்படியாவது ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. அங்கு சிறுபான்மையினர் வாக்குகள்தான் வெற்றியை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. எனவே, தென் கேரளாவில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்றால் டி.டி.பிரவீனை விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சி.எஸ்.ஐ பேராய நிர்வாகத்தில் இருந்து டெல்லிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ள கேரளத்தைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால் மூலமே நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர் விரிவாக.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *