Sorting by

×

”மலைகளின் இளவரசி” என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் இன்று காலை 8 மணியளவில் 61 ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கியது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி,வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் தொடங்கி வைத்தனர்.

வரும் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு கிளி, நெருப்புக்கோழி,சேவல்,மயில்,கரடி போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண்,தோட்டக்கலை மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், மீன் பிடித்தல் போட்டி,நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 2.50 லட்சம் மலர்ச் செடிகள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி உள்ளன.

மலர் கண்காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு 75 ரூபாயும் 10 வயதுக்குக் கீழ் உள்ள சிறியவர்களுக்கு 35 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பார்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம்.

கடந்த ஆண்டைவிட நுழைவுக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *