கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அப்போது வருங்காலங்களில் ரெகுலரான பணி நியமனங்கள் நடக்கும்போது இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பணி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் அரசு சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.
எனவே கோவிட் காலத்தில் பணிபுரிந்தவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றதன் விளைவாக, தற்போது அரசு அவர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

ஆனால், 2020 முதல் 2022 மார்ச் மாதம் வரை COVID பணியில் பணியாற்றியதற்கான வருகைப் பதிவு, பணியாற்றிய மருத்துவமனையின் சான்று உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்படும் பணி தாமதமானதன் காரணமாக, நிகழ்ச்சி தள்ளிப் போனது.
தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்து விட்டதால், இன்று அந்த செவிலியர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரச் சொல்லி மின்னன்ஞ்சல் சென்றுள்ளது.

தமிழ்நாடு முழுவதுமிருந்தும் சுமார் 800 பேர் வரை நாளை காலை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லவிருக்கிறார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் முடிவடைந்து விட்டால் நாளையே அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படலாமெனத் தெரிகிறது. சுமார் நான்காண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, இவர்களுக்குப் பணி கிடைக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
