சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை தக்க வைத்து, ஏழாவது முறை அரியணை ஏறுவதற்கு திமுக காய் நகர்த்தி வருகிறது.
கடந்த காலங்களில் கோட்டை விட்ட கொங்கு மண்டலத்தில், இந்தமுறை வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கோவையில் பிப்ரவரி 22, 27 என 5 நாள்களில் 2 மாநாடுகளுக்கு திட்டமிட்டுள்ளார்.
என்ன செய்தாலும் திமுக உள் கட்சி பஞ்சாயத்துகள் ஓய்ந்தபாடில்லை. கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, செந்தில் பாலாஜியின் கரூர் ஆதரவாளர்கள் தான் கோவையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மேற்பார்வை செய்தனர்.

அவர்களின் கண் அசைவில் தான் தேர்தல் பணிகள் நடந்தன. தற்போது 2026 சட்டமன்ற தேர்தலையொட்டியும் கரூர் கம்பெனி கோவையில் களமிறங்கிவிட்டனர். கோவை திமுகவில் தற்போது பூத் வாரியாக தரவுகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
ஒவ்வொரு பூத்துக்கும் செந்தில் பாலாஜி ஒரு மஞ்சள் நிற நோட் கொடுத்துள்ளார். அதில் அந்த பூத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, ஆண், பெண் வயது என குடும்பம் வாரியாக பிரித்து எழுதுகிறார்கள். 18-30 வயது, 31-50 வயது, 51 – 80 வயது என்று பிரித்து எழுத வேண்டும். குடும்பம் வாரியாக ரேஷன் அட்டை எண், மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறார்களா என்பதையும் பதிவு செய்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களின் விபரங்களையும் குறிப்பிட வேண்டும் என செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக உடன்பிறப்புகள் கூறுகையில், “இரவு பகல் பாராமல் பூத் நோட் எழுதி வருகிறோம். பல இடங்களில் எழுதுவதற்கு ஆள் இல்லாமலும் சிரமப்படுகிறோம். இப்படி எடுக்கப்பட்ட தரவுகளை மஞ்சள் நோட்டில் எழுதி, கோவை வந்துள்ள கரூர் கம்பெனி ஆள்களிடம் சமர்ப்பிக்க சொல்லியுள்ளனர்.
அவர்கள் அனைத்து விபரங்களையும் பரிசோதித்துவிட்டு ஓகே சொல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலானோருக்கு, இது சரியில்லை. இது இல்லை.. அது இல்லை என்று மீண்டும் எழுத சொல்கிறார்கள்.

இதுவே கஷ்டப்பட்டு செய்த பணி. இதை ஏன் நிராகரிக்கறீர்கள் என கேள்வி எழுப்புகிறோம். அதற்கு கரூர் கம்பெனி ஆள்கள் மிகவும் மரியாதை குறைவாக பதில் சொல்லி திட்டுகிறார்கள். இதனால் கோவை உடன்பிறப்புகள் மிகுந்த கொந்தளிப்பிலும், மன வேதனையிலும் இருக்கிறோம்.
பலர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறோம் என்றும் சண்டையிட்டு வருகிறார்கள். அனைவரும் கட்சிக்காக தான் பணியாற்றுகிறோம். இங்கு பெரியண்ணன் மனப்பான்மையில் யாரும், யாரையும் ஆதிக்க செலுத்த கூடாது” என்றனர்.
கோவை உடன்பிறப்புகளைன் அப்செட்டை எதிர்பார்க்காத செந்தில் பாலாஜி தரப்பு, மாநாட்டு பணிகளுடம் இந்த உள்ளூர் பஞ்சாயத்துகளை சரிகட்டும் பணிகளில் தீவிரம் காட்டுகிறதாம்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
