கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘’நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்ற அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு தர வேண்டும். நடிகர்கள் பின்னால் ரசிகர்கள் செல்லக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் எந்த அடிப்படையில் பேசினார் எனத் தெரியாமல், நான் பேசுவது தவறாகப் போய்விடும். அவர் சிறந்த நடிகர், பண்பாளர், அதைவிட சிறந்த மனிதர். பல நடிகர்கள் அரசியலிலும் ஜெயித்துள்ளார்கள்.
லோக் சபா தேர்தலில் கோவையில் நான் நின்றபோது, யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் அரசியல் செய்தேன். என்னை சார்ந்தவர்களும் யாருக்கும், எதுவும் தரக்கூடாது என சொன்னேன். மீடியாக்கள் கரூர் சென்று நான் பணம் தந்தேனா என மக்களிடம் கேளுங்கள். ஒன்னாம் நெம்பர் புரோக்கர் செந்தில் பாலாஜி, ஜெயிலில் 300 நாள் இருந்தவர். அவரது தம்பி ஒன்றரை வருடம் தலைமறைவாக இருந்தவர். இதைப்பற்றி மீடியாக்கள் கேட்பதில்லை.

கோவை தெற்கு தொகுதியில் கரூரைச் சேர்ந்த 18 சுயேட்சைகளை செந்தில்பாலாஜி போட்டியிட வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒரே நோட்டரியிடம் தான் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். தொண்டாமுத்தூரில் கரூரை சேர்ந்த 3 பேர் நிற்கிறார்கள். திமுகவின் வெற்றி கோவை தெற்கில் இருந்து ஆரம்பிக்கும் என முதல்வர் சொன்னார். ஆனால் திமுகவின் தோல்வி இங்கு ஆரம்பித்து, சேப்பாக்கம் வரை செல்லும். பல இடங்களில் குளறுபடிகளுடன் இருந்த திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் அரசு அதிகாரிகள் ஆதரவோடு, பல விதமான உத்திகளைக் கையாண்டு ஏற்க வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மற்ற வேட்பாளர்கள் கோர்டுக்குப் போகப் போகிறார்கள்.
கோவை தெற்கு தொகுதியில் கரூர்காரர்கள் பணத்தோடு சென்று வாக்காளர்களுக்கு இந்த 200, 500, குண்டா, அண்டா, ஸ்மார்ட் வாட்ச் என தருகிறார்கள். செந்தில் பாலாஜி தவறாக சேர்த்த சொத்துகளை, அவரது பினாமிகள் கந்து வந்துட்டிக்கு கொடுத்து சேர்த்த பணத்தை வீடு வீடாக இரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் தான் போட்டி உள்ளது. திமுக கூட்டணி பிளவுபட்டுள்ளது. புதுச்சேரியில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி, ஸ்டாலின் மற்றும் திமுக ஆகிய வார்த்தைகளைக்கூட பயன்படுத்தவில்லை. ஒரே நாளில் இருவரும் பிரசாரம் செய்தாலும், சந்தித்துக் கொள்ளவில்லை. ஸ்டாலினும் ராகுல்காந்தி பெயரை சொல்லவில்லை. அழையா விருந்தாளி மனநிலையில் இருக்கும் ராகுல் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்வாரா என தெரியவில்லை. திமுக ஜெயிக்க வேண்டாம் என ராகுல் காந்தி நினைக்கிறார்.
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி தர வேண்டும். கூட்டம் அதிகமாக சேரும் என அனுமதி மறுப்பது ஏற்புடையது அல்ல. காவல் துறை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருக்க வேண்டும். திமுக தலைவர்கள், தொண்டர்கள் பரிசுப்பொருட்களை கொண்டு செல்வதைப் பிடிக்க வேண்டும். அப்பாவி மக்கள் பணம் பறிமுதல் செய்யப்படுகிறதே தவிர, அரசியல்வாதிகளின் பணம் செய்யப்படுவதை பார்க்க முடிவதில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
