வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன்கள் வழங்கப்படும் என்பது தி.மு.க.வின் முக்கியமான வாக்குறுதியாக உள்ளது. இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் 7 வது வீதியில் உள்ள ஒரு தனியார் கணினி மையத்தில் வாக்காளர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் இல்லத்தரசி மாதிரி கூப்பன்களை தி.மு.க.வினர் நேற்று மாலை வழங்கியதாகவும், அதில் ரூ.8 ஆயிரம் கூப்பனுக்கு எந்த பொருள் வாங்குவீர்கள் என்ற தகவலும் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அந்த கணினி மையத்தை முற்றுகையிட்டனர். கணினி மையத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கு இருந்தவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்காளர்களை ஏமாற்றும் வகையில் மாதிரி கூப்பன்களை வழங்கி வாக்குகளை சேகரிக்க தி.மு.க.வினர் முயல்வதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பின்னர் இது குறித்து தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அங்கு இருந்த வாக்காளர் பட்டியல், விண்ணப்பங்கள் மற்றும் கூப்பன்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கூப்பன்களை வழங்கியவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
