வாணியம்பாடி அருகே கேரள விரைவு ரயில் சக்கரத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னா் முழுமையாக பழுது நீக்கப்பட்டு 20 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டது.
புது தில்லியில் இருந்து கேரளா செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை வாணியம்பாடி -விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே வளையாம்பட்டு அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்பதிவு செய்யப்பட்ட (எஸ் 5) பெட்டி சக்கரத்தில் புகை வந்தது.
தகவல் அறிந்த இன்ஜின் ஓட்டுநா் ரயிலை நடுவழியில் நிறுத்தினாா். அதையடுத்து ரயில்வே பணியாளா்கள் பழுதை சரி செய்தனா்.
பின்னா், 20 நிமிஷங்கள் தாமதமாக ரயில் ஜோலாா்பேட்டை சென்றது. உடனடியாக பழுது சரி செய்யப்பட்டதால் மற்ற ரயில்கள் தாமதமின்றி சென்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
