சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இடைக்கால பட்ஜெட்டுடன் நிறைவடைந்த இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி உள்ளது. அப்படி சட்டபேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த விவாதம் இப்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
உடனே தி.மு.க வின் அமைச்சர் சேகர்பாபு எழுந்து, “இதையேத்தான் 2021 ஆம் ஆண்டு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். அந்தக் கட்டத்தை எல்லாம் உடைத்தெறிந்து வியூக வலையை அறுத்தெறிந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அன்றைக்கு கட்டத்திற்கே கட்டத்தைப் போட்டவர். இன்றைக்கு கிரகப் பலன்கள் அனைத்தும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு இருக்கின்றது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், தமிழ்க் கடவுள் முருகன் எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களோடு கைகோத்துக் கொண்டிருக்கின்றார். கிரகங்கள் எதுவும் எங்களைச் செய்யாது.

மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு 2026 ஆம் ஆண்டு முதல்வர் நாற்காலியிலே எங்கள் முதல்வர்தான் மீண்டும் அமர்வார். நம்முடைய நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சட்டமன்றத்திற்கு வருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து தங்கம் தென்னரசு பேசும்போது, “அடிப்படையிலே எனக்கு கிரக நிலையிலேயே நம்பிக்கை இல்லை. இருந்தாலும்கூட மாண்புமிகு உறுப்பினர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அதிலே நிறைந்த நம்பிக்கை இருக்கக்கூடிய காரணத்தினால் அவருடைய பாணியிலே அதற்கு பதில் சொல்லவேண்டுமென்றால், கிரக நிலையைப் பொறுத்தமட்டிலே உங்களுக்கு அஷ்டமத்திலே சனி இருக்கிறது, எங்களுக்கு ஒன்பதிலே குரு இருக்கிறது” என்று ஜோதிடர் பாணியில் பதில் சொல்ல, உடனே எழுந்த பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நிதி அமைச்சர் அவர்கள் ஒன்றை ஒத்துக்கொண்டுவிட்டார்.
நம்பிக்கை இல்லை என்று சொல்லி தினசரி அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அஷ்டமத்தில் சனி என்று சரி-ஆகச் சொல்கிறார். அதாவது அஷ்டமத்தில் சனி இருந்தாலும், எனக்கு குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதை நிதி அமைச்சர் அவர்கள் மறந்துவிட்டார்.” என்று இவரும் பதில் அளிக்க சபையில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கு தங்கம் தென்னரசு, “நான் அவருக்கு அஷ்டமத்தில் சனி இருக்கிறது என்று சொன்னால், நான் அவருக்கு என்று தனிப்பட்ட வகையிலே சொல்லவில்லை, நான் அரசியல்ரீதியாகவே சொன்னேன்.

அதை அவரே ஏற்றுக்கொண்டு இங்கே அதற்கு ஒப்புதல் தருகிறார்.” என்று கூற… மறுபுறம் நயினார் நாகேந்திரன் எழுந்து, “தப்பித்தோம், பிழைத்தோம் என்று அல்ல! நிச்சயமாக இறைவனுடைய பிராப்தம் இருந்தால் நாம் எல்லோரும் இங்கு எதிர்க்கட்சிகளாக அல்லது ஆளுங்கட்சிகளாக சந்திக்கின்ற வாய்ப்பு இருந்தால் இன்னும் சொல்லப்போனால் அதையும்தாண்டி பல்வேறு மனக்கருத்துகள், மன மாட்சிமைகள் இருந்தால்கூட தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜோதிடத்தை நம்பாத பகுத்தறிவு பேசும் தி.மு.க-வும் , ஆன்மிகத்தை தங்கள் அரசியலின் பங்காக கடைபிடித்துவரும் பா.ஜ.க-வும் ஒரே நேரத்தில் இறுதி சட்டசபை கூட்டத்தில் கலகலப்பாகப் பேசியது வரவேற்கக்கூடிய செய்தியாக இப்போது மாறியுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
