Sorting by

×

கடந்த 38 நாள்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிகக் கடுமையான போர் பதற்றம் நீடித்து வந்தது. திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “புதன்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்படும்” என எச்சரித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ஈரான், “இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை பின்வாங்க மாட்டோம்.” எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், சீனாவின் அதிரடித் தலையீட்டாலும் பாகிஸ்தானின் சமரச முயற்சியாலும் தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அமெரிக்கா - ஈரான்
அமெரிக்கா – ஈரான்

உலகையே அச்சுறுத்திய ஒரு போரைத் தடுத்து நிறுத்தி இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டில் நடைபெற்ற முந்தையப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவிற்கும், ஈரான் பிரதிநிதிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. இந்நிலையில், ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா களமிறங்கியது.

போர் நீடித்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் என்பதையும், தனது Belt and Road முதலீடுகள் சிதையும் என்பதையும் உணர்ந்த சீனா, ஈரான் மீதுள்ள தனது பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்தியது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானுடன் இணைந்து 5 அம்ச அமைதித் திட்டத்தை உருவாக்கினார். சீனாவின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியதுடன், அதிபர் ஜின்பிங்கிற்குத் தனது மரியாதையைத் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான், இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமான ‘நடுநிலை இடமாக’ மாறியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் ஒத்துழைப்போடு, இஸ்லாமாபாத் இந்தத் தூதரகப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது. ஈரான் தரப்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கலந்து கொள்கிறார்.

“இஸ்லாமாபாத் ஒப்பந்தம்” என அழைக்கப்படும் இந்த முயற்சி, நிரந்தர அமைதியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், போர் நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. இஸ்ரேல்-லெபனான் விவகாரம் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை உலக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *