மும்பை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த வாரம் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய சந்தை ஏற்றத்திற்கு ஏற்ப இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவடைந்தன. அதே வேளையில், இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததன் மீதான நம்பிக்கையும் சந்தைகளில் ஏற்றத்தை வெகுவாக தூண்டியது.
தலால் ஸ்ட்ரீட்டின் எழுச்சியை தொடர்ந்து, 8வது அமர்வாக அதன் வெற்றிப் பயணம் நீடித்தது. செஸ்னெக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1.5 சதவிகிதம் வரை உயர்ந்த நிலையில் பெடரல் வட்டி விகிதக் குறைப்பு குறித்த உலகளாவிய நம்பிக்கையால் இந்திய சந்தை மூன்று வார உயர்வில் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 444.12 புள்ளிகள் உயர்ந்து 81,992.85 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 355.97 புள்ளிகள் உயர்ந்து 81,904.70 புள்ளிகளாக நிலைபெற்றது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 108.50 புள்ளிகள் உயர்ந்து 25,114 புள்ளிகளாக நிலைபெற்றது. இன்றைய வர்த்தகத்தை தொடர்ந்து, சென்செக்ஸ் எட்டாவது நாளாக ஏற்றத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில் 3,145 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,559 பங்குகள் உயர்ந்தும் 1,482 பங்குகள் சரிந்தும் 104 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தது.
சென்செக்ஸில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் எடர்னல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிரென்ட் மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் ஆகியவை உயர்ந்த வர்த்தகமான நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பாவில் சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்தது.
ஜிஎம்டிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், ஆனந்த் ரதி, எல் அண்ட் டி ஃபைனான்ஸ், சைடஸ் வெல்னஸ், வாரீ எனர்ஜிஸ் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,472.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,045.54 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் குறுகிய காலத்தில் நேர்மறையான உந்துதலைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றார் ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்டின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.47 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $66.72 ஆக உள்ளது.
இதையும் படிக்க: இந்திய குடும்பங்களின் காலாண்டு செலவு 33% அதிகரிப்பு
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
