தென் தமிழகத்திலும், டெல்டா மாவட்டங்களிலும் நாளை(மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நாளை மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நந்தனம், தியாகராய நகர், சைதாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதிய வேளையில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நெல்லையில் மழை பெய்து வருகிறது.
அதேபோல், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
