தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெறுவது அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் சம்பவ வழக்கு, சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் வெளியிடுவதில் சிக்கல் என்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், பரப்புரை செய்யவும் தவெக தலைவர் விஜய் இன்று சேலம் வருகிறார்.
விமானம் மூலம் இன்று மதியம் சேலம் வரும் விஜய், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வாகனத்தில் வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையிலிருந்தே சேலத்தில் தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறையின் அனுமதியை பெற்ற தவெக தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சீலநாயக்கன்பட்டியில் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் நிர்வாகிகள் அமரும் வகையிலும் அவர்களுக்கு ஸ்நாக்ஸ் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
மேலும் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு கட்சி நிர்வாகிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பாதைகளுடன், தலைமை நிர்வாகிகள் மற்றும் விஜய் வந்து செல்ல தனிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
வருகின்றவர்ளுக்கு உதவவும், கூட்டத்தினரை நெறிப்படுத்தவும் ஆயிரக்கணக்கான பாதுகாவலர்களும், தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஆம்புலன்ஸ்களுடன் 15 டாக்டர்கள் கொண்ட டீம் முதலுதவி சிகிச்சை செய்வதற்காக தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃகியூ ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும், அனுமதி இல்லாதவர்களும் பொதுமக்களும் வர வேண்டாம்’ என்று மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
