காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் அமைச்சருமான ஆலம்கீர் ஆலமை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை புதன்கிழமை கைது செய்துள்ளது. அவருடன் தொடர்புடைய இரு நபர்களின் வீட்டில் இருந்து ரூ.34.50 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததன் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமைச்சரின் தனி உதவியாளர் சஞ்சீவ் குமார் லால் மற்றும் லாலின் வீட்டுப் பணியாளர் ஜெஹாங்கீர் ஆலம் ஆகியோரை கைது செய்த அமலாக்கதுறை மே 14-ம் தேதி அமைச்சரை ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. இரண்டாவது நாளான புதன்கிழமையும் 6 மணி நேரமாக தொடர்ந்த விசாரணைக்கு பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜெஹாங்கீர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான விசாரணையில் பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர் அடிபடுவதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. குறிப்பாக மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை கிராமப்புற வளர்ச்சி துறையில் பல அதிகாரிகளுக்கும் பண மோசடியில் தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டது.
