சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கும் நிலையில், தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் விஜய்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவற்றுக்கு முதன்மை தேர்தல் கண்காணிப்பாளர்களையும் இணை கண்காணிப்பாளர்களையும் நியமித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான பொறுப்பு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
விஜய் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அல்லது பெரம்பூரில் போட்டியிடலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் விஜய்யை தவிர்த்து கட்சியின் முக்கிய முகங்கள் சிலரும் சென்னையில் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முக்கியஸ்தர்கள் களமிறங்கப்போகும் ஏரியா என்பதால் இந்தத் தொகுதிகளுக்கான பொறுப்பு ஆதவ் அர்ஜூனுக்கு வழங்கப்படுவதாக கூறுகின்றனர்.

அதேமாதிரி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் என கொங்கில் ஒரு பகுதியும் அதனுடன் தர்மபுரி, கிருஷ்ணகிரி சேர்த்து செங்கோட்டையனின் ஆதரவாளரான சத்யபாமாபுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் பொறுப்பாளராக ஆனந்த் மற்றும் ஆதவோடு இணைந்து செங்கோட்டையன் செயல்படுவாராயினும், கொங்கு மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் இங்கே செங்கோட்டையன் அதிக கவனம் செலுத்துவார் என்கின்றனர்.
சேலம் அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜின் சொந்த ஊர். கடந்த வாரத்தில் விஜய் சேலம் சென்றிருந்த போது ஆனந்த், செங்கோட்டையன் உட்பட முக்கிய நிர்வாகிகளுக்கு அருண் ராஜ் தன்னுடைய வீட்டில் விருந்து கொடுத்திருந்தார்.
செங்கோட்டையன் கட்சியில் இணைந்த போதும் கொங்கு மண்டலத்தோடு சேர்த்து சேலம் பொறுப்பையும் அவருக்கு கொடுக்காமல் வைத்திருந்தனர். காரணம் அருண் ராஜ். அவர் கொங்கில் தனக்கும் ஒரு பிடி வேண்டுமென எதிர்பார்த்தார். விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு வேண்டியதும் இப்போது கிடைத்திருக்கிறது.
சேலம் + நாமக்கல் இரண்டு மாவட்டங்களும் அருண் ராஜூக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாமக்கலில் உள்ள திருச்செங்கோட்டில் அருண் ராஜ் போட்டியிடப் போவதும் குறிப்பிடத்தக்கது.

சத்யபாமாவுக்கு 6 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தப்படியாக அதிகமாக 5 மாவட்டங்களை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்கள் இவரின் கீழ் வருகிறது. முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், டெல்டாவில் கணிசமாக இருக்கும் அந்த சமூகத்தினரை கவரும் வகையில் கு.ப.கிருஷ்ணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் வழங்கப்படுகிறது. சி.டி.ஆர் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடலாமா எனும் ஐடியாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மாவட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தும் வகையில் கண்காணிப்பாளர்களை நியமித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. தென் மாவட்டங்கள் தவிர்த்து 28 மாவட்டங்களுக்கு 9 கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கும் விஜய், 10 தென்மாவட்டங்களுக்கு 5 கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியதை தாண்டி தென் மாவட்டங்களில் கட்சியின் செயல்பாடு பெரிதாக இல்லை என்பதால் அதிகமான பொறுப்பாளர்களை நியமித்திருப்பதாக கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

இந்தப் பட்டியல் தயாரானவுடனேயே கட்சிக்குள் ஒருவித புகைச்சலும் எழுந்திருக்கிறது. முதன்மைப் பொறுப்பாளர் பட்டியலிலும் தன்னை வைத்து வட மாவட்டங்களையும் கையில் கொடுத்திருப்பதால் ஆதவ் அர்ஜூனா தரப்பு செம குஷியாம். ஆனால் பொருளாளர் வெங்கட்ராமனுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கப்படவில்லை.
அதேமாதிரி, கட்சிக்காக ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் அருண் ராஜூக்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்படாமல் இரண்டு மாவட்டங்களில் அடக்கியதில் அவரும் கொஞ்சம் அப்செட் என்கின்றனர். மேலும், தென் மாவட்டங்களில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பொறுப்பை வழங்காமல் திடீரென கட்சிக்குள் வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக சில மா.செக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
