Sorting by

×

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம் செய்திகள் வருகின்றன. மறுபுறம் டெல்லியில் சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகுமாறு சம்மன் வந்துள்ளது. டெல்லி செல்ல வேண்டிய விஜய் எதற்காக பனையூரில் கூட்டம் போடுகிறார்? என்ன திட்டத்தில் த.வெ.க இருக்கிறது என விசாரித்தோம்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க-வை கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க தரப்பு, கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணிக்கு சென்றபிறகு, த.வெ.க-வை பா.ஜ.க பக்கம் கொண்டுவரும் வேலையில் டெல்லி தலைமை இறங்கியுள்ளது. இதற்காக, தனி டீம் ஒன்றும் களத்தில் இறங்கியுள்ளது. இதுவரை த.வெ.க நிர்வாகிகள் மட்டுமே, கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசிவந்த நிலையில், இந்த முறை விஜய்க்கு நெருக்கமான நபர்களை வைத்து கூட்டணி காய்நகர்த்தலை பா.ஜ.க மேற்கொள்கிறதாம்.

தவெக விஜய்
தவெக விஜய்

இதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக கரூர் விவகாரத்தில் ஏற்கெனவே, சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகியிருந்தார் விஜய். அப்போதே அடுத்தகட்ட விசாரணைக்கு அழைப்பதாகச் சொல்லியிருந்தனர். கூட்டணி விவகாரம் ஒருபுறம் சூடுபிடித்து வரும் நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய் தரப்புக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்தது. ஆனால் அன்று கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதால், தன்னால் ஆஜராக முடியாது என விஜய் தரப்பில் பதில் மனு அளித்துள்ளார்கள். வேறு ஒரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ள விஜய் தரப்பு கோரிக்கைவைத்துள்ளது.

அப்படியன்றி சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்புள்ளதா? என்று கேட்டிருக்கிறார்கள். வழக்கு டெல்லி சி.பி.ஐ யில் நடப்பதால், டெல்லியில் மட்டுமே ஆஜாராக முடியும் என  சி.பி.ஐ. தரப்பில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். டெல்லி சி.பி.ஐ-யிடம் செல்ல வேண்டுமா என்றும்… விசாரணை என்ற பெயரில் அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்படுத்துவார்களோ என்றும் விஜய் தரப்பு யோசிக்கிறதாம்.

இதனால் டெல்லிக்கு அழைத்த மார்ச் 10-ம் தேதி பனையூரில் நிர்வாகிகள் கூட்டத்தை த.வெ.க நடத்துகிறது. இதில் மாநில நிர்வாகிகள் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என தலைமையிலிருந்து உத்தரவு வந்துள்ளது. மற்றொருபுறம் அதே 10-ம் தேி அன்று இருபத்தி ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர்காணலையும் நடத்த இருக்கிறார் விஜய். ஒவ்வொரு தொகுதிக்கு இரண்டு முதல் மூன்று நபர்களை தேர்வு செய்துள்ளது, புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் தலைமையிலான குழு. அவர்களை பனையூரில் வைத்து நேர்காணல் செய்யும் விஜய் அது குறித்த வீடியோவையும் வெளியிட உள்ளார். 

சிபிஐ

இந்த நேர்காணல் முடிந்த பிறகு விஜய்க்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை வரிசையாக நடத்தி, அவரை பிஸியாக காட்ட நினைக்கிறது த.வெ.க தலைமை. அதை வைத்து டெல்லி சி.பி.ஐ-யிடம் ஆஜராகும் நாள்களை தள்ளிப்போடலாம் என த.வெ.க தரப்பு திட்டமிடுகிறது. கூட்டணிக் குறித்து முழுமையாக ஒரு முடிவு எடுக்காமல் டெல்லிக்குச் செல்ல வேண்டாம் என விஜய்யிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். 

தவெக தலைவர் விஜய்

மற்றொருபுறம் கூட்டணி இருக்கோ, இல்லையோ, நமக்கான வேட்பாளர்களை 234 தொகுதிகளுக்கும் இறுதி செய்யுங்கள் என்று விஜய் தனது நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார். அந்த அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. “முதற்கட்டடமாக ஐம்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து விஜய்யிடம் ஒப்புதல் வாங்க உள்ளார்கள். அந்த வேட்பாளர்கள் பட்டியலை வைத்து முதற்கட்ட பட்டியலை  வரும் மார்ச் 16 தேதி வெளியிட உள்ளது, கட்சி. அதனை தொடர்ந்து விஜய் பிரசாரத்திற்கான சுற்றுப்பயணமும் துவங்க உள்ளது” என்கிறார்கள் த.வெ.க வின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள். 

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *