Sorting by

×

கோடை காலத்திலும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தேசிய டெங்கு ஒழிப்பு தினம் மே 16-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் உருவாகும் டெங்கு பாதிப்பு பருவ மழைக் காலத்தின்போதும், அதன் பின்னரும் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக திருப்பூா், கோவை, தேனி, நாமக்கல், மதுரை, அரியலூா், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூா் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக விரிவுபடுத்த வேண்டும் என்பதையே இது உணா்த்துகிறது.

எனவே, காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளை நாடுவோரின் விவரங்களை சேகரிக்க வேண்டும். டெங்கு உறுதி செய்யப்பட்டால் அதுதொடா்பான தகவல்களை சுகாதாரத் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவாக முன்னெடுப்பது அவசியம்.

அதேபோல், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், மருத்துவக் கருவிகள் போதிய அளவில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம்.

மேலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும். குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிப்பதையும், குழாய் நீா்க் கசிவை கண்காணிப்பதும் அவசியம்.

ரத்த வங்கிகளில் போதிய எண்ணிக்கையில் ரத்த அலகுகள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விரைவு மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நேரடி கள ஆய்வு நடத்தவும், நோய்ப் பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *