Sorting by

×

அமலுக்கு வந்த தேர்தல் நடைமுறை:

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். மற்ற அனைத்து இடங்களையும் சேர்த்து மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தேர்தல் நடத்தை வரும் மே 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் 50,000 ரூபாய் மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

பறக்கும் படை சோதனை

234 தொகுதிகளில், தொகுதிக்கு ஒன்பது பறக்கும் படை, ஒன்பது நிலை கண்காணிப்புக் குழு என 2,160 பறக்கும்படை மற்றும் 2,160 நிலை கண்காணிப்புக் குழு தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றன.

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த 15-ம் தேதி மாலை 4.27 முதல் 17-ம் தேதி வரை 23.28 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்களைக் கைப்பற்றித் தேர்தல் அலுவலர்கள் விசாரணையில் இருக்கிறார்கள்.

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்:

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆறு மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்களும், 188 காவல்துறை பார்வையாளர்களும், 366 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொது பார்வையாளர்களும், 40 காவல்துறை பார்வையாளர்களும் 151 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பார்வையாளர்கள் நியமனம்

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்களும், 4 காவல்துறை பார்வையாளர்களும், 17 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2026 மார்ச் 18-க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பார்வையாளர்கள் அங்குச் சென்றதும், தங்களுடைய தொடர்பு விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவார்கள்.

மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்கள் என யாரேனும் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான அவர்களின் குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அவர்கள் நிர்ணயிப்பார்கள் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

கடந்த முறையை விட அதிகம்:

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாகச் செலவின பார்வையாளர்களைத் (Expenditure Observers) தமிழகத்துக்கு நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு பின்னல் கெடுபிடிகளை அதிகப்படுத்தத் திட்டமிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்கள் சிலரிடம் பேசினோம், “தேர்தல் பார்வையாளர்களில் செலவின பார்வையாளர்களின் பணி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர் ஒருவர் தொகுதியின் அளவை பொறுத்து 28 முதல் 40 லட்சம் வரையிலும் செலவு செய்ய அனுமதி உள்ளது. இந்த குறிப்பிட்ட அளவுக்குள் ஒரு வேட்பாளர் பிரசார கூட்டங்கள், வாகனங்கள், விளம்பரங்கள் செய்யப்படுகின்றனவா என்பதையும், வேட்பாளர்களின் செலவுப் பதிவேடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு தேர்தல் செலவின பார்வையாளருடையது.

செலவின பார்வையாளர்கள்

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டுக்கு 118, மேற்கு வங்கத்துக்கு 122 செலவின பார்வையாளர்களை நியமித்திருந்த நிலையில், இம்முறை மேற்கு வங்கத்துக்கு 100, தமிழ்நாட்டுக்கு 151 செலவின பார்வையாளர்களை நியமித்திருக்கிறது.

தொகுதி அதிகமான மேற்கு வங்கத்துக்குக் குறைவாகவும், தமிழ்நாட்டுக்கு மிக அதிகமாகவும் அதிகாரிகளை நியமித்திருப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பலமுனை போட்டி நிலவப்போகும் இந்த தேர்தலில் பல்வேறு தொகுதிகளின் பணம், பரிசுப்பொருள் இஷ்டத்துக்கு விளையாடும்.

தேர்தலுக்கு முன்பாகவே ஆளும் தரப்பில் பரிசுப் பொருள்கள் வாரி இரைக்கப்பட்ட நிலையில் அது தேர்தலில் இன்னும் அதிகரிக்கக் கூடம். அதனைக் கட்டுப்படுத்தி இறுக்கிப் பிடிக்கவும், ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கவும் ஒரு ஆயுதத்தை எடுத்திருக்கிறதா என்ற சந்தேகம் தன்னிசையாகவே எழுகிறது.

ஆளும் தரப்பை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் இறுக்கிப் பிடித்துத் தேர்தலை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும்… செய்வார்களா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.” என்றார்கள் விளக்கமாக.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *