Sorting by

×

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பில் இருந்து அனுமதி கொடுக்காமல் இருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதி சேலத்தில் பொதுமக்கள் சந்திப்புக் கூட்டமாக இல்லாமல் தவெக நிர்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டமாக நடத்த அனுமதி அளிக்குமாறு தவெக தரப்பில் இருந்து போலீஸாரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதைப் பரிசிலித்த போலீஸார் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து, சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து-நடராஜன் திடலில் பிப்ரவரி 13-ஆம் தேதி விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தவெக மாநாடு
தவெக மாநாடு

51 நிபந்தனைகள்…

இந்தக் கூட்டத்துக்கு தவெக-வினருக்கு போலீஸ் தரப்பில் இருந்து 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் வேனில் நின்றபடிதான் பேச வேண்டும், தவெக நிர்வாகிகளுக்கு இருக்கைகள் போடப்படாது, இக்கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், இக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும், குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை போன்ற 51 நிபந்தனைகளை போலீஸார் விதித்துள்ளனர்.

இந்நிலையில், நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து – நடராஜன் திடலில் நடைபெற்று வரும் பணிகளை தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சேலத்தில் விஜய்யுடனான நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளோம். இந்தக் கூட்டத்துக்கு வருகை தரும் மக்கள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது.

பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம். வீட்டில் இருந்தபடி, தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளத்திலும் இந்நிகழ்ச்சியை நேரடியாகக் காணலாம்.

இந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அனைவருக்கும் காவல்துறையின் அறிவுரையின்படி அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. விஜய்யின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வரலாறு படைப்பதாக அமைந்து வருகிறது. சேலத்தில் இருக்கும் மக்களுக்கு வரலாறு படைக்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமையும்.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
விஜய்

விஜய் எத்தனை மணிக்கு நிகழ்ச்சிக்கு வருவார் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

சென்னையில் பொது மக்களை தவெக கட்சியினர் தாக்கியதாகக் கூறப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த செங்கோட்டையன், ”பொதுமக்களிடம் குறை கேட்பதற்கு தவெக-வினர் சென்றனர். அப்படி இருக்கையில் மக்களை எதற்காக தவெக-வினர் தாக்கப் போகிறார்கள். இது பற்றிய உண்மைகளை ஊடகங்கள்தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

விஜயால் மட்டும்தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என மக்கள் நினைக்கின்றனர். அது சேலத்தில் இருந்து தொடங்கும். இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்த 850 தவெக தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 100 பெண்களும் பங்கேற்றுள்ளனர்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *