தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக்கழகம் என்ன கட்சி என்பதே தெரியவில்லை. நம்ம வீட்டுப் பிள்ளைகள் அந்தக் கட்சியில் லேசாக எட்டிப் பார்க்கிறார்கள். அதற்கு நாம்தான் புத்திமதி சொல்ல வேண்டும்.

அரசியல் விமர்சனத்தில் விஜய்யின் அரசியல் பற்றிதான் பேச வேண்டுமே தவிர, அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசக்கூடாது. பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் தலைவர்களுட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். விஜய் வந்தால் வெடி போடுங்கள். விசில் ஊதுங்கள். ஆனால், அவர் வரும் பிரசார வாகனத்திற்கு மட்டும் வெடி போட்டு விசில் ஊதுகிறார்கள். விஜய் வரும் பிரசார வாகனத்தைப் பார்த்தால் எமன் ஏறும் எருமை மாடு போலத் தெரிகிறது.
கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய்தான். கோட்டையைப் பிடிக்கிறேன், பிடிக்கிறேன் என்று சொல்லி இத்துப் போன செங்கோட்டையனை பிடித்துள்ளார் விஜய். இது ஒரு நாடகக் கம்பெனி போல ஓடிக் கொண்டிருக்கிறது.
பஞ்ச் டயலாக் எழுதி வந்து ஆவேசமாகப் பேசுவது அரசியல் அல்ல. தி.மு.க எங்களின் அரசியல் எதிரி. பா.ஜ.க கொள்கை எதிரி என்று கூறும் த.வெ.க தலைவர் விஜய், சேலத்தில் நடந்த கூட்டத்தில்கூட ஸ்டாலின் சார், முதல்வர் சார் என்று பேசிய விஜய், ஏன் எஸ்.ஐ.ஆர் பற்றி பேசவில்லை?

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதிராக இவ்வளவு வஞ்சகத்தை மோடி செய்கிறாரே? விஜய் ஒரு வார்த்தை பேசியிருக்கலாமே? உங்களுக்கு டயலாக் எழுதிக் கொடுத்தவர் எழுதித்தரவில்லையா? உங்களுக்கு உங்கள் அரசியல் எதிரிதான் முக்கியமா? இல்லை சித்தாந்த எதிரி முக்கியமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியதிருக்கிறது” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
