வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று இறுதி செய்யவிருக்கிறார். இதைத் தொடர்ந்து தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நாளை நடத்தவிருக்கின்றனர்.

தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களைக் கடந்த மார்ச் 10 ஆம் தேதி விஜய் உறுதி செய்திருந்தார். வேட்பாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து கூறி அனுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் இரண்டாம் கட்டமாக 50 வேட்பாளர்களை உறுதி செய்து அவர்களையும் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார்.
உறுதி செய்யப்பட்ட இந்த 110 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி கடந்த சில நாள்களாக தவெகவின் தேனாம்பேட்டை அலுவலகத்தில் நடந்திருந்தது. இதே அலுவலகத்தில்தான் என். ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, வியூக வகுப்பாளர் ஜான் ஆகியோர் எஞ்சிய 124 வேட்பாளர்களை உறுதி செய்யும் பணியிலும் இறங்கியிருந்தனர்.
இன்று அதிகாலை வரைக்கும் மிக திவீரமாக வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலைகள் நடந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் இன்று பனையூரில் விஜய்யைச் சந்திக்கவிருக்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்து கூறி அவரவர் தொகுதிக்கான மொத்த டேட்டாவையும் ஒரு புத்தகமாக விஜய் வழங்கவிருக்கிறார்.

நாளையே வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நடத்த தவெக தரப்பு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கான இடமும் அனுமதியும் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுவதால், இடத்தை இறுதி செய்ய பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது விஜய் தரப்பு.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
