மதுரையில் உள்ள மண்டோலா நகரில் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக முகூர்த்தகால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது, “இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிற அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பொதுகூட்டமா அல்லது மாநாடா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
தனிநபர் தாக்குதலில் யாருடைய மனதும் புண்படக்கூடாது என்பது என் எண்ணம். விஜய்க்கு ஏதாவது கொள்கை இருக்கிறதா? இதிலெல்லாம் பாஜகவுடன் முரண்படுகிறோம் என எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?. கொள்கை என வெறும் பேப்பரில் மட்டும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது யாருடைய கூட்டணி பலவீனமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பதே சந்தேகம் தான்.

சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கிறது. இதில் யார் நன்றாக ஆட்சி செய்தார் என்றுதான் பார்க்க வேண்டும். ஈபிஎஸ் அல்லது மு.க.ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்தாரா என்பதை தான் பார்க்க வேண்டும்.
திமுக 525 தேர்தல் அறிக்கைகளை கொடுத்தது 90 தேர்தல் வாக்குறுதிகளை தவிர மற்ற எதுவுமே நிறைவேற்றவில்லை. எதிலுமே முற்று பெறாத ஆட்சி இது. நாட்டில் சட்டம் ஒழுங்கு முக்கியம். ஆனால் இவர்களால் ஒரு டிஜிபியை கூட நியமனம் செய்ய முடியவில்லை. பள்ளிக்கூடத்தில் கஞ்சா விற்கிற நிலைமைதான் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி 2000 ரூபாய் அறிவித்தார். அதை காப்பியடித்து திமுக 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 5 வருடம் கோடைக்காலம் வந்தது அப்போதெல்லாம் கொடுக்கவில்லை. மகளிருக்கு 1000 ரூபாயே பாராளுமன்ற தேர்தலின் போது தான் கொடுத்தார்கள். அதே போல பொங்கல் பரிசு தொகுப்பு 3000 ரூபாய் இந்த வருடம் தான் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் தேர்தலுக்கானது. இவர்களுடைய ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
