எடப்பாடி தொகுதியில் தவெக-வின் அதிகாரபூர்வ வேட்பாளர் மற்றும் அவருடைய மாற்று வேட்பாளர் இருவரது வேட்புமனுக்களுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
‘இப்படி நடக்கறது புதுசா என்ன, மேலிடங்களின் அன்டர் டீலிங் இதெல்லாம்’ என விமர்சித்துக் கடந்து செல்கின்றனர் சராசரி அரசியல் விமர்சகர்கள்.
அரசியலும் தேர்தலும் புதுசு என்பதால் விஜய்க்கும் தவெக-வுக்கும் இது மாதிரி இன்னும் நிறைய உள்குத்து சம்பவங்கள் அரங்கேறலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி தொகுதிகளின் தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த போது இரண்டு தொகுதிகளையும் உள்ளடக்கிய விருதுநகர் வடமேற்கு மாவட்ட தவெக-வின் செயலாளர் மாரி செல்வமே அவர்களுடன் செல்லவில்லை.
இது குறித்து தொகுதி தவெக-வினர் சிலரிடம் பேசினோம்.

”இப்ப சிவகாசி வேட்பாளரா அறிவிக்கப்பட்டிருக்கிற கீர்த்தனாவுக்கு விருதுநகர். ‘விருதை மகள்’ங்கிற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவா இருந்தவங்க. தவெக கட்சியிலேயே இல்லை. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்கறதுக்கு சில தினங்களுக்கு முன்னாடிதான் கட்சியிலயே சேர்ந்தாங்க. திமுகவின் ‘பென்’ ஐடி விங்கில் கொஞ்ச காலம் வேலை பார்த்த அவங்க அந்த தொடர்பு மூலமேதான் தவெக-வுலயும் சீட் வாங்கியிருக்காங்க. விருதுநகர் தொகுதியைத்தான் கேட்டிருக்காங்க. ஆனா அந்த மாவட்டத்தின் செயலாளர் விருதுநகரை விட்டுத் தர முடியாதுன்னு சொல்லிட, வேற வழியில்லாம சிவகாசிக்கு வந்துட்டார்.
சிவகாசியில, விஜய் ரசிகர் மன்றத்துல பல வருஷமா இருந்து இப்ப விருதுநகர் வடமேற்கு மாவட்டச் செயலாளரா இருக்கிற மாரி செல்வத்துக்கு இவர் வந்ததால் சீட் போச்சு.
ஆனாலும் மனசைத் தேத்திகிட்டு பிரசார வேலைகளை செய்ய அவர் தயாராதான் இருக்கார். ஆனா கீர்த்தனா அவரைச் சட்டை செய்யாம தனி ரூட்டில் பிரசாரம் செய்துகிட்டிருக்காங்க. இதனாலதான் வேட்பு மனு தாக்கலுக்கே அவர் கீர்த்தனா கூடப் போகலை. தேர்தலுக்குப் பிறகு கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவிக்கே கீர்த்தனா முயற்சிக்கலாம்னு ஒரு தகவல் ஏரியாவுல உலா வருது.
முதல் தேர்தல் விஜய் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து தேர்தலில் களம் காணுகிறார். ஆனா தொகுதிகளில் இந்த மாதிரி பாலிடிக்ஸ் செய்துட்டிருந்தா எப்படிங்க ஜெயிக்க முடியும்” என நொந்து போய் பேசுகின்றனர்.

கீர்த்தனாவைப் போலவே… ஸ்ரீவில்லிபுத்தூர் தவெக வேட்பாளர் கார்த்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தபோதும், மாரி செல்வம் உடன் செல்லவில்லையாம். அவரும் மாரி செல்வதை அழைக்கவில்லை என்கிறார்கள்.
மாரி செல்வத்திடம் இது குறித்துக் கேட்டோம்.
“அன்னைக்கு எனக்கு வெளியூரில் இன்னொரு முக்கியமான வேலை இருந்தது. அதனால நான் உடன்செல்லவில்லை” என்றவரிடம், `மேற்கண்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் உங்களை பிரசாரத்துக்கு அழைப்பதில்லையாமே’ என்றும் கேட்டோம்.
‘கட்சியில எனக்கு சில பொறுப்புகள் தந்திருக்காங்க. அதை நான் செய்திட்டிருக்கேன்’ என முடித்துக் கொண்டார் அவர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
