தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”தமிழக முதல்வரை சந்திப்பதோ, தி.மு.க.,வில் இணைவதோ ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதைவிடுத்து, ’எம். ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் ஸ்டாலின் முதல்வர் ஆவார்’ என்று கூறியுள்ளார். இதை அவரது மனசாட்சியே ஒத்துக்கொள்ளாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மாக்கள் ஒரு காலமும் அவரை மன்னிக்காது.

’கடந்த 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் தான் ஓ.பி.எஸ். இவற்றை எல்லாம் மன்னித்துதான் ஓ.பி.எஸ்-ஐ நகர்மன்ற உறுப்பினர், நகர்மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் முதல்வர் பதவியை தொடர முடியாத சூழல் இருந்தபோதுகூட, ஓ.பி.எஸூ -க்கு அப்பதவியை வழங்கினார். தி.மு.க-வை எதிர்த்துதான் அ.தி.மு.க.,வை மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கினார். அ.தி.மு.க.வுக்கு அரசியல் நேர் எதிரி தி.மு.க.,தான்.
’தீய சக்தி’ என்ற அடைமொழியோடு தி.மு.கவை நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்தியவர் எம். ஜி.ஆர். அ.தி.மு.க தொண்டர்களை எம்.ஜி.ஆர்., ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ என்றுதான் அழைப்பார். அ.தி.மு.கவின் ரத்தம் இருக்கும் வரை தொண்டர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு ஓ.பி.எஸ் உடலில் ஓடுவது அ.தி.மு.க.,வின் ரத்தமா? இதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரைப்பற்றி நாட்டு மக்கள் இன்று தெரிந்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் சட்டமன்றத்தில் பேசும்போது, தி.மு.கவில் இருந்தவர்கள் மற்றும் அங்கு பலன் பெற்றவர்கள் கூட அப்படி பேசியிருக்க மாட்டார்கள்.

’பராசக்தி’ திரைப்படத்தைப் பற்றி அன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன நேரத்தில், அந்த பராசக்தி படத்தின் வசன புத்தகத்தை என்றும் வைத்திருப்பேன், என்னுடைய தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர் என்று சொன்ன நேரத்திலே, அன்றே அவர் தி.மு.கவில் சேர்ந்திருக்க வேண்டும். காலம் கடந்து சென்றிருக்கிறார். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எவ்வளவு நம்பிக்கை துரோகமாக இந்த இயக்கத்தில் பணியாற்றி இருந்திருக்கிறார் என்பது இன்றைக்கு அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
எந்த கட்சியாலும் அ.தி.மு.க வின் வாக்கு வங்கி பாதிக்காது. இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள், ஒரு இலையை எம்.ஜி.ஆராகவும், மற்றொரு இலையை ஜெயலலிதாவாகவும் பார்ப்பார்கள். வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள். த.வெ.கவைப் பார்த்து தி.மு.க.,தான் பயப்படுகிறது. அதற்காகத்தான் இருக்கிற கட்சி, போன கட்சி, வந்த கட்சி என இடம் எல்லோரையும் சேர்த்து தி.மு.க ஓவர் லக்கேஜ் ஆகிவிட்டது.

ஓவர் லக்கேஜ் ஏற்றிய வண்டி ஓடாது. மனம் வெதும்பிதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அங்கே பயணிக்கிறார். இந்த நிலையில்தான், தே.மு.தி.க இணைந்துள்ளது. ஆற்றில் தத்தளித்து மூழ்கின்றவர்களை காப்பாற்றி மூழ்குவதைப் போலத்தான் தி.மு.க கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் நிலை தேர்தலுக்கு பின்னர் தெரியவரும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
