Sorting by

×

‘மேனேஜர் கூட செட் ஆகலைனு கம்பெனி மாறினா, கடைசியில் நாம சேர்ந்த புது கம்பெனிக்கே அந்த மேனேஜரும் வந்துட்டாரு’

– ஸ்டான்ட் அப் காமெடி ஏரியா ஒன்றில் தென்பட்ட ஒரு கமென்ட் இது. இன்றைய அரசியல் சூழலுக்கு ரொம்பவே பொருந்திப் போகிறது.

‘நீ முன்னால‌ போனா நான் பின்னால வருவேன்’ என்கிற ரீதியில் கம்பெனி செட் ஆகாமல் சென்றவர்களும் அவர்களுக்குப் பின்னாடியே அவர்கள் சென்ற இடத்துக்கே சென்ற மேனேஜர்களும் யார் யார் பார்க்கலாமா?

கமல்

கமல்ஹாசனும் க‌ளை எடுக்க வேண்டிய முதல் நபரும்!

‘கலைஞரின் மகனாகச் சொல்கிறேன்’ என ஸ்டாலின் டிவியில் பேச… கையிலிருந்த டார்ச் லைட்கைக் கொண்டு டிவியை உடைத்தபடி நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் துவக்கிய போது, அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இணைந்து செயல்பட்டவர் கோவையைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன்.

ம.நீ.ம சார்ப்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தேர்தலில் கமல் கோவை தெற்கில் போட்டியிட, இவர் சிங்காநல்லூரில் நின்றார். இந்த தேர்தலில் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத சூழலில், தேர்தலுக்குப் பிறகு ‘கட்சியில் ஜனநாயகம் இல்லை’ எனக் கூறி வெளியேறினார். பதிலுக்கு கமலுமே ‘களத்தில் எதிரிகளுடன் துரோகிகளூம் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டேன். க‌ளையெடுக்கப் பட வேண்டிய பட்டியலில் முதல் ஆளாக இருந்ததே துரோகியான அவர்தான். ஒரு களையே தன்னை களை என புரிந்து விலகி விட்டது’ என கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார்.

ம.நீ.ம வில் இருந்து வெளியேறிய மகேந்திரன் நேராகச் சென்றது திமுகவுக்குதான். அவர் மட்டும் செல்லாமல் 11,000 உறுப்பினர்களுடன் சென்று சேர்ந்தார்.

திமுக-வுமே கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு மாநில அளவில் கட்சியில் தகவல் தொழில் நுட்ப அணியில் இணைச் செயலாளர் பதவி தந்தது.

மூன்றே வருடங்கள்தான். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. ‘தமிழ்நாட்டு நலனுக்காக எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்குகிறோம்’ என திமுகவுடன் கூட்டு சேர்ந்தார். அந்த தேர்தலில் ம.நீ.ம.. போட்டியிடாது, பதிலுக்கு அடுத்தாண்டு நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் வழங்கப்படுமென ஒப்பந்தம் போடப் பட்டது.

அடுத்த வருடம் ராஜ்ய சபா தேர்தலும் வந்து கமலும் ராஜ்யசபாவுக்குச் சென்று விட்டார். இதோ அடுத்த சட்டசபைத் தேர்தலும் வந்து விட்டது. திமுக – மநீம கூட்டணி முன்பை விட வலுவாகி விட்டது. இந்த முறை கோவையில் ஏதாவதொரு தொகுதியில் மகேந்திரன் திமுக சார்பில் நிற்பார் என்கிறார்கள். ‘களை’ மகேந்திரனுக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்வாரா… காலம் தான் பதில் சொல்லும்.

நீங்க இக்னோர் பண்ணலாம், நாங்க…?

மறுமலர்ச்சி திமுகவில் வைகோவின் மகன் துரையுடன் செட் ஆகாமல் வெளியேறி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற தனிக்கட்சியை துவக்கியிருப்பவர் மல்லை சத்யா. வெளியேறிய புதிதில் சத்யா தரப்பும் வைகோ தரப்பும் பாடிக் கொண்ட வசைகள் ஏராளம். ஆனால் வரும் சட்டசபைத் தேர்தலில் மதிமுக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளது திவெக.

தொகுதிப் பங்கீடு குறித்த திமுகவுடன் பேசிவிட்டு வெளியில் வந்த வைகோவிடம் ‘திவெக வும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதே’ எனச் செய்தியாளர்கள் கேட்டதுதான் தாமதம், ‘ஐ இக்னோர் ஹிம்’ அன ஆவேசமாகப் பதிலளித்து விட்டு நடையைக் கட்டினார் வைகோ.

அருகிலிருந்த திமுகவினரின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருந்திருக்கும், நீங்களே கெஸ் பண்ணிக்கோங்க.

உள்ளூர் அரசியல்!

மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற போது அவருக்குப் பதிலாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் ஒ.பன்னீர் செல்வம். பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி வ்ந்த ஜெயலலிதா போட்டியிட வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்து தொகுதியைத் தந்தவர் தங்க தமிழ்ச் செல்வன். தேனிக்காரர்களான இவர்கள் இருவருமே ஒரே கட்சியில் இருந்த போதே உள்ளூர் அரசியலால் ஒருவருக்கொருவர் செட் ஆகாது. தலைமைக்கு யார் அதிக நெருக்கம் என்கிற போட்டியா தெரியாது. ஜெ.மறைவுக்குப் பிறகு பன்னீருடன் இருக்க பிடிக்காமல் டிடிவி பக்கம் போனவர் அங்கிருந்து திமுகவுக்குத் தாவினார். திமுகவும் இவரை தேனியில் பன்னீருக்கு எதிரானவராகவே களமிறக்கியது.

Thanga Tamilselvan

இந்தச் சூழலில் தற்போது பன்னீரும் திமுகவுக்கு வந்து விட்டார்.

திமுகவில் சேர்ந்த பின் செய்தியாளர்களை பன்னீர் சந்தித்த போது அவர் பக்கத்தில் பளீச் பற்களுடன் போஸ் கொடுக்கவும் மறக்கவில்லை தங்க தமிழ்ச் செல்வன்.

‘தேர்தலில் எப்படியும் திமுக பன்னீருக்கு சீட் கொடுக்கும். தேர்தலில் அவர் ஜெயிச்சா பிறகு ஏதாவது முக்கியமான பதவி தரலாம், இதை அண்ணன் எப்படி எடுத்துக்கப் போறார், தேனி மாவட்ட அளவுல இனி அண்ணன் எப்படி பாலிடிஸ் பண்ணப் போறார்னு தெரியலை’ என இப்போதே உச் கொட்ட ஆரம்பித்து விட்டனர், தங்கத்தின் தம்பிகள்.

சுதீஷும் ரவீந்திரனும் கை குலுக்குவாங்களா?

தற்போது நாடாளூமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வாகியிருக்கும் இருவரும் இந்த ‘கம்பெனி – மேனேஜர்’ பட்டியலில் வருகிறார்கள். இருவரும் ஒரே கூட்டணி சார்பாகத் தேர்வாகியிருக்கிறார்கள்

திமுக தனது நான்கு சீட்டுகளில் ஒன்றை காங்கிரஸுக்கும் ஒன்றை தேமுதிகவுக்கும் கொடுத்திருப்பது தெரியும். தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளார் சுதிஷ் தேர்வாகியிருக்கிறார். மீதி இரண்டை கட்சிக்காரர்களான‌ திருச்சி சிவாவுக்கும் கான்ஸ்டைன்டன் ரவீந்திரனுக்கும் தந்துள்ளது.

சுதீஷ்
சுதீஷ்

ரவீந்திரன், விஜயகாந்த் தேமுதிகவை உருவாக்கிய போது உடன் இருந்தவர். தேமுதிக சார்பில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்.. அந்த தேர்தலில் இவர் பெற்ற வாக்குகளே திமுகவின் முக்கியப் புள்ளியான கலைஞரின் பேரனான தயாநிதியின் தோல்விக்கே காரணமானது. அந்த தேர்தல் முடிந்த அடுத்த சில மாதங்களில் தேமுதிகவில் இருந்து வெளியேறி திமுகவுக்குப் போய் விட்டார்.

இந்தச் சூழலில்தான் தற்போது கட்சி அவருக்கு மாநிலங்களவை சீட் தர, இந்த நேரம் பார்த்த தேமுதிகவும் திமுக அணிக்கு வந்திருக்கிறது.

மாநிலங்களவையில் பதவி ஏற்கும் நாளில் ரவீந்திரனும் சுதீஷும் கை குலுக்கிக் கொள்வார்களா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கவுண்டமணி

அரசியல்ல இதுவும்..!

‘இவங்க ஒருவருக்கொருவர் சந்திக்க நேரிட்டால் தர்மசங்கடமா இருக்குமே’ என்கிறீர்களா, நீங்க மட்டுமே அப்படி நினைச்சிட்டிருக்கலாம்.

வடிவேலு என்ன நினைப்பார் என தேமுதிகவைத் சேர்த்த போதோ, வைகோ என்ன நினைப்பார் என சத்யாவின் ஆதரவைப் பெற்ற போதோ, தங்கம் என்ன நினைக்குமோ என பன்னீரை வரவேற்ற போதோ, பிரேமலதா என்ன நினைப்பாங்க என ரவீந்திரனுக்கு சீட் கொடுத்த போதோ முதல்வர் ஸ்டாலின் நினைச்சிட்டா இருக்க முடியும்? வாய்ப்பே இல்லை. இருக்கவே இருக்கு கவுண்டமணியின் ‘அரசியல்ல இதெல்லாம்..’ டயலாக்.

நாம வேணும்னா கொஞ்சம் மாத்தி இப்படிச் சொல்லலாம், ‘அரசியல்ல சங்கடங்கள் சாதாரணம்’!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *