Sorting by

×

வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. அதையொட்டி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தே.மு.தி.க நிர்வாகிகளிடம் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நேர்காணல் நடந்தது.

பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த நேர்காணலில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம், கூட்டணி குறித்து முதலில் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒட்டு மொத்த மாவட்டச் செயலாளர்கள், தி.மு.கவுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்திருப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதன்பிறகு மாவட்டம் வாரியாக நேர்காணல் நடந்திருக்கிறது.

தே.மு.தி.க நேர்காணல்

20-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது.

21-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியாலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்டது.

22-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நடந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் நேர்காணல் நடத்திய பிரேமலதா, `தொகுதியில் உங்களின் செல்வாக்கு என்ன?, கட்சியின் செல்வாக்கு, எவ்வளவு செலவழிக்க முடியும்?’ என பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு நேர்காணலில் பங்கேற்றவர்கள் பதிலளித்ததும், `தி.மு.க கூட்டணியில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்’ என்று பிரேமலதா பேசியிருக்கிறார்.

தே.மு.தி.க நேர்காணல்

நேர்காணலில் பங்கேற்ற தே.மு.தி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்

“தி.மு.க கூட்டணியில் ஒற்றை இலக்கத்தில்தான் தே.மு.தி.கவுக்கு சீட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் பிரேமலதா, விருத்தாசலத்திலும் விஜய பிரபாகரன், விருதுநகரிலும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது எங்கிறார்கள்.

இதுதவிர சென்னையில் விருகம்பாக்கம், தர்மபுரி, டெல்டா மாவட்டத்தில் ஒரு தொகுதி, தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி உள்ளிட்ட தொகுதிகள் தே.மு.தி.கவுக்கு கிடைக்கும் என நம்புகிறோம்.

தென்காசி மாவட்டத்தில் தி.மு.க கூட்டணியிலிருக்கும் ம.தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியை தே.மு.தி.கவுக்கு ஒதுக்கினால் தென்மாவட்டத்தில் கட்சி வளர வாய்ப்பாக அமையும். இந்தத் தொகுதியில் போட்டியிட தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் நெடுவயல் எம்.குமார் நேர்காணலின்போது, `வாசுதேவநல்லூரில் போட்டியிட்டால் நிச்சயம், தே.மு.தி.க வெற்றி பெறும். ஏனெனில் இந்தத் தொகுதியில் 30 சதவிகிதம் ஆதிதிராவிட சமுகத்தினர் இருந்தாலும் தெலுங்கு பேசுபவர்கள் தொகுதியில் பரவலாக இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுக்கள் தே.மு.தி.கவுக்கு கிடைத்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்’ என பேசியிருக்கிறார்.

பிரேமலதா
பிரேமலதா

அடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகிகள், பாளையங்கோட்டை தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கூறியிருக்கிறார்கள். தென் மாவட்ட நிர்வாகி ஒருவர், கோடியில் செலவழிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். நேர்காணலில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் லட்சத்தில் மட்டுமே செலவு செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்கள்.

கோடி, லட்சங்களில் செலவு செய்பவர்களிடம் எவ்வளவு நாள்களுக்குள் உங்களால் ஏற்பாடு செய்ய முடியும் எனவும் கேட்கப்பட்டுள்ளதாம். பின்னர், கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கட்டும், அதன் பின்னர் பார்க்கலாம் என நேர்காணல் முடிக்கப்பட்டதாம்.

தொடர்ந்து அ.தி.மு.க வஞ்சகம் செய்தது குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் நேர்காணலில் ஆவேசமாக பேசினார்கள். அதையெல்லாம் பிரேமலதா பொறுமையாக கேட்டார், பின்னர் தி.மு.க கூட்டணியில் நமக்கு 11 தொகுதிகள் கிடைக்கும் என கூறிய பிரேமலதா, சற்று யோசித்த அவர், 12, 13 தொகுதிகள் வரைகூட கிடைக்கும் என தெரிவித்தார்” என்றனர்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *