Sorting by

×

“பெண்கள் பாதுகாப்பு தமிழ்நாட்டில் முற்றிலுமாக இல்லை. பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள், ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது…” என்று தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேசியுள்ளார்.

வாக்கு சேகரிப்பில் சௌமியா

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதிக்கு என்னவெல்லாம் தேவை என்பதை குறிப்பிட்டும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிலும் தருமபுரி பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துப் பேசி வருகிறார்.

சமீபத்திய பரப்புரையில், “தருமபுரிக்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்கள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது நிறைவேற்ற தயாராக இருந்தார். ஆனால், திமுக ஆட்சி வந்தவுடன் அதனை முழுவதுமாக நாசம் செய்துவிட்டார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரப்பும் வகையில் நீர் பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி.

வெற்றிலை விவசாயிகளுடன்

ரூ 5 லட்சம் கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு அரசு, அதில் ரூ 5000 கோடியை ஒதுக்கியிருந்தால் தருமபுரிக்கான நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றியிருக்க முடியும்.

தருமபுரி மாவட்டம் பாலைவனமாக இல்லாமல், வளம் கொழிக்கும், பசுமை மாவட்டமாக மாற வேண்டும் என்பதற்காக, காவேரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். அதற்காக அயராது உழைப்போம், சிப்காட் தொழிற்பேட்டையை கொண்டு வருவதற்கு முழு முயற்சி எடுப்போம்.

குடும்பத் தலைவர்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருப்பதால் தருமபுரி மாவட்டத்தில் ஒரு குடும்பம்கூட ஒன்றாக வாழவில்லை,

ஆந்திராவிலுள்ள ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் 75 சதவிகித வேலை அந்த மாநில மக்களுக்கும் மீதி 25 சதவிகித வேலை வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. எல்லோருக்கும் தொழிற்பயிற்சி அளித்து ஸ்ரீ சிட்டியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை கொடுக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை திமுக அரசு கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, நிறைவேற்றவே இல்லை. தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றவுடன், முதலில் சிப்காட்டில் எத்தனை தொழிற்சாலைகள் கொண்டுவர முடியுமோ அத்தனையும் கொண்டு வந்து, இந்த மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம்.

சௌமியா அன்புமணி

தமிழ்நாட்டில் அதிக அளவில் குழந்தைத் திருமணம் நடைபெறும் மாவட்டம், தருமபுரி மாவட்டம் தான். அந்தக் கொடுமை ஏன் இன்னும் நடைபெறுகிறது என்றால், வறுமை, வேலை வாய்ப்பு இல்லாததுதான் காரணம்.

நன்றாக படிக்கக்கூடிய பட்டம் பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் வெளியூர் செல்கிறார்கள். அதனால் இளம் வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் பெண்களின் படிப்பு தடைபடுகிறது. இதற்கு ஒரே தீர்வு, இந்தப் பகுதியில் உள்ள விவசாயப் பொருட்கள் மாம்பழம், புளி போன்றவற்றை மதிப்புக்கூட்டி தொழிற்சாலை உருவாக்கி, சந்தைப்படுத்த வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு தமிழ்நாட்டில் முற்றிலுமாக இல்லை. பெண்களுக்கு நடத்தப்படும் கொடுமைகள், ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் தமிழ்நாட்டில் நடக்கிறது. இது எங்கோ நடைபெறவில்லை. நம் ஊரிலும் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 பெண்கள் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

போக்சோ என்பது பெரும்பாலோருக்கு தெரியாது. ஆனால் தற்போது போக்சோவிற்கு நம்மை பழக்கப்படுத்தி விட்டார்கள். இது எல்லோர் வீட்டிலும் நடக்கும் என்பது போல ஆட்சியாளர்கள் பழக்கப்படுத்தி விட்டார்கள். குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 3000 இருந்த இக்குற்றம் தற்போது 7000 ஆக மாறி இருக்கிறது. தினமும் 35 குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் வடமாநிலத்தில் நடைபெறும் என்று முன்பு சொல்வார்கள். தற்போது அது நம் ஊரிலேயே நடக்கிறது.

இதை தடுக்கப்பட வேண்டுமென்றால் போதைப் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும். இதனால் தான் இத்தனை குற்ற சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த மது, போதை பழக்கத்தை தமிழ்நாட்டில் இருந்து ஒழித்தால் மட்டுமே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் ஒரே ஒரு இடத்தில்கூட போதை ஒழிப்பு குறித்து சொல்லவில்லை. அதற்கு என்ன அர்த்தம் என்றால், இனி போதைப்பொருள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும், ரேஷன் கடைகளில் கூட கிடைக்கும் என்பதுதான் பொருள். மது போதை இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்க வேண்டும், கொண்டு வர வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் அமைய வேண்டும்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *