தமிழக அரசியல் வரலாற்றில் தோல்வியே காணாத தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.
1957-ம் ஆண்டு போட்டியிட்ட குளித்தலையில் தொடங்கி, 2016-ம் ஆண்டு போட்டியிட்ட திருவாரூர் வரை தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்தவர்.

1984 தேர்தலில் போட்டியிடாத கலைஞர்
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழக சட்டமன்றத்தின் தவிர்க்க முடியாத முகமாக விளங்கிய கலைஞர் ஒரே ஒரு முறை மட்டும் தேர்தல் களத்தில் வேட்பாளராக களமிறங்காமல் இருந்திருக்கிறார். அதுதான் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல்.
ஏன் கலைஞர் போட்டியிடவில்லை?
1983-ம் ஆண்டு இலங்கை வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த சமயத்தில் அங்கிருந்த தமிழர்களுக்கு ஆதரவாகவும் மத்திய – மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் கலைஞர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
அவருடன் சேர்ந்து மறைந்த கே. அன்பழகனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா
இவர்கள் ராஜினாமா செய்த அடுத்த ஆண்டே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
பதவியை ராஜினாமா செய்த கையோடு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தார்மீக ரீதியாகச் சரியாக இருக்காது என்று கலைஞர் கருதியதால் 1984 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்று சொல்லப்படுகிறது.
எம்.ஜி.ஆர் – இந்திரா காந்தி அனுதாப அலை
தவிர 1980 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ் 1984-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
அந்த சமயத்தில் அதிமுக தலைவராக இருந்த எம்.ஜி. ஆர் சிறுநீரகக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
மறுபுறம் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இந்த இரண்டு சம்பவங்களும் தமிழக மக்களிடையே ஒரு மிகப்பெரிய அனுதாப அலையை உருவாக்கியிருக்கிறது.

எம்.ஜி.ஆர் மீதான மக்களின் அதீத அன்பும், இந்திரா காந்தியின் மறைவால் ஏற்பட்ட காங்கிரஸின் ஆதரவு அலையும் சேர்ந்து திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதால் 1984- தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் பதவி ஏற்றிருக்கிறார்.
அந்தக் கூட்டணியின் வெற்றியை முதலிலேயே கலைஞர் தீர்மானித்ததாலும் 1984 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
