வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் (மார்ச் 30) சென்னையிலிருந்து ரயில் மூலமாக காட்பாடிக்கு வந்தபோது, அவரின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் உற்சாக வரவேற்பு அளித்தார். போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்தபடி பேரணியாகவும் துரைமுருகனை காரில் நிற்கச் செய்து அழைத்துசென்றனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். நிபந்தனைகளை பின்பற்றாமல், தேர்தல் விதிகளை மீறியதாக கூறப்படுகிறது.

இது பற்றி, காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரின் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, தி.மு.க பொதுச்செயலாளரும் வேட்பாளருமான துரைமுருகன், எம்.பி கதிர் ஆனந்த், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், தி.மு.க பகுதி செயலாளர் வன்னியராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டீக்காராமன், ஒன்றியச் செயலாளர் தணிகாச்சலம், மண்டல குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றியச் சேர்மன் வேல்முருகன் ஆகிய 8 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொதுத் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
