அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “திமுக குழுவினரோடு, விசிக சார்பில் நானும் கட்சியின் பொதுச்செயலாளர்களான சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம்.
2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான சராசரியான பொதுத்தேர்தல் அல்ல.

இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளைக் காலுன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடும் மதச்சார்பற்றக் கூட்டணியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடும் இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கமாக இருக்கிறது என்ற உரிமையோடும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் திமுக-வோடு பேரம் பேசுகின்ற கட்சியாக இல்லை.
திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது தமிழ்நாட்டிற்கு வெற்றி.
தமிழக மக்களுக்கான வெற்றி. சமூக நீதிக்கான வெற்றி என்கிற புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து கருத்துகளை நாங்கள் மனம் திறந்து பகிர்ந்துகொண்டோம்.
எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தெரியப்படுத்தினோம்.

அதிகாரப் பகிர்வு என தொகுதிப் பகிர்வைத்தான் சொல்கிறோம். திமுக தரப்பில் எங்கள் கருத்துகளைக் கேட்டுக்கொண்டார்கள்.
தலைவரோடு நாங்கள் விவாதித்த பின்னர் மீண்டும் நாங்கள் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.
இன்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
