தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாா் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவாலிடம் தில்லி காவல் துறை நடத்திய விசாரணையில் ஸ்வாதி மாலிவால் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த திங்களன்று தில்லி முதல்வரின் இல்லத்திற்குச் சென்றபோது முதல்வரின் தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்குச் சென்று ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தார்.
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் கேஜரிவாலின் உதவியாளா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!
இதற்கிடையே ஸ்வாதி மாலிவாலினை தில்லி காவல் துறையின் கூடுதல் ஆணையா் பிஎஸ் குஷ்வாஹா தலையிலான குழு வியாழக்கிழமை பிற்பகலில் மாலிவால் இல்லத்திற்குச் சென்று விசாரணை நடத்தியது. சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கேஜரிவாலின் உதவியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஸ்வாதி மாலிவால் தில்லி காவல் துறையிடம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.
மௌனம் கலைந்த ஸ்வாதி மாலிவால் வழங்கிய வாக்குமூலம்..
கேஜரிவாலை சந்திக்க அறையில் காத்திருந்தபோது பிபவ் குமார் அறைக்குள் நுழைந்தார். திடீரென சரமாரியாக என்னைத் திட்டினார், பலமுறை கண்ணத்தில் அறைந்தார். மேலும் முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ்ப் பகுதியில் பலமுறை தாக்கினார். தன்னை விட்டுவிடும்படி கதறி அழுதேன். சற்று நேரத்திற்குப் பின் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.
நடந்ததை நினைத்து கடந்த சில நாள்களாக தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும், எனக்கு நடந்த சம்பவம் மிகவும் மோசமானது என்றும் அவர் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, தில்லி போலீஸார் ஸ்வாதி மாலிவாலை மருத்துவப் பரிசோதனைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்து ஸ்வாதி மாலிவால் நேற்றிரவு வீடு திரும்பினார்.
இதுதொடர்பாக பிபவ் குமார் மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
