Sorting by

×

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் களப்பேரங்களுக்கிடையே முடிந்திருக்கிறது. “நல்ல நேரம்” முடிவதற்குள் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பிடிவாதத்தால் திமுக வேட்பாளருடன் மோதல் ஏற்பட்டது. இதில் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன், நேற்று காலை 11 மணிக்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

மறுபுறம், திமுக தரப்பில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகனும் திமுகவின் வேட்பாளருமான ஐ.பி.செந்தில்குமார், மதியம் 12 மணிக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது.

காலை 11:00 மணியளவில் சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் மனுத் தாக்கல் செய்ய வந்ததால் வரிசையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக சுயேச்சை வேட்பாளர்களின் வருகையினால், திண்டுக்கல் சீனிவாசன் 12:00 மணிக்குத் தாமதமாக வந்து சேர்ந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையில், மதியம் 12:00 மணிக்கு வரவிருந்த ஐ.பி. செந்தில்குமார் முன்கூட்டியே, அதாவது காலை 11:30 மணிக்கே அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதியம் 12:00 மணியளவில் அங்கு வந்து சேர்ந்தார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன்

இரு முக்கியக் கட்சி வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் அலுவலக வாசலில் திரண்டதால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை அறைக்கு வெளியே தடுத்து நிறுத்தினர்.  

அப்போது “நல்ல நேரம்” முடிவதற்குள் தான் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, திண்டுக்கல் சீனிவாசன் காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் சீனிவாசன், “எனது நல்ல நேரம் முடிவதற்குள் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும், என்னை உள்ளே விடுங்கள்” எனக் கூறி அதிகாரிகளிடமும் காவல்துறையினரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கிருந்த திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமார், சீனிவாசனைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், கோபத்தின் உச்சத்தில் இருந்த சீனிவாசன், “நீயே இப்படிப் பேசலாமா?” என்று அவரிடமும் தெரிவித்தார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன்

இறுதியில், முதலில் வந்தவர் என்ற அடிப்படையில் ஐ.பி. செந்தில்குமார் உள்ளே அனுமதிக்கப்பட்டார். தனது “நல்ல நேரம்” கடந்து விடுமோ என்ற பதற்றத்தில், அதிகாரப்பூர்வப் பாதையைத் தவிர்த்து மாற்றுப் பாதை வழியாக அலுவலகத்திற்குள் நுழைந்த சீனிவாசன், அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் மீது அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது என இரண்டு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக வேட்பாளர்), ​முத்துராமலிங்கம் (பாஜக), ​ஜான் கென்னடி (பாமக),​ நல்லசாமி (அமமுக),​ மருதராஜ் (முன்னாள் மேயர், அதிமுக) ஆகிய 5 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *