மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதோடு, தொகுதி மறுவரையறைப் பணியையும் அமைதியாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “மத்திய அரசு ஏப்ரல் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் 26-ம் தேதி காங்கிரஸ் தலைவருக்குக் கடிதம் வந்தது. அப்போதே, `கடந்த 30 மாதங்களாக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவது ஏன்?’ என்ற கேள்விக் கேட்டு பதில் அனுப்பப்பட்டது.
மேலும், இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
ஆனால், இந்தக் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தை அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான இரண்டு மசோதாக்கள் கொண்டுவரப்படலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவுகின்றன.
தற்போது 543 ஆக இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% உயர்த்தி 816 ஆக மாற்றுவது. தொகுதிகளை மறுவரையறை செய்வது ஆகிய மசோதாக்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய அரசியல் சாசனத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்தக் கூட்டத்தொடரின் கால அளவு ஒரு மிகப்பெரிய அரசியல் சதி. தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க-விற்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழ்நாடு, மேற்கு வங்க மக்களவை உறுப்பினர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கும்போது, அவர்களை அவைக்கு வரவிடாமல் தடுப்பதே அரசின் நோக்கம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தேர்தல் பணிகளை விட்டுவிட்டு உறுப்பினர்கள் டெல்லிக்கு வருவது இயலாத காரியம் என்பதால், அவர்களின் வாக்குகள் இன்றி மசோதாவை நிறைவேற்ற அரசு முயல்கிறது.
தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் தென் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் இன்னும் நசுக்கப்படும் என்ற பேராபத்தும் இருக்கிறது. உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தின் பலம் 80-லிருந்து 120 ஆக உயரும்போது, தமிழ்நாடு + புதுச்சேரி பலம் 40-லிருந்து 60 ஆக மட்டுமே உயரும். இதனால் மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். மேலும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் பேசக் கிடைக்கும் நேரம் வெகுவாகக் குறைந்து, நாடாளுமன்றம் ஒரு ‘ரப்பர் ஸ்டாம்பாக’ மாறும் நிலை ஏற்படும்.
இந்த நடவடிக்கை அரசியல் சாசன மோசடி. வெறும் விவாதத்திற்காகவே சபை கூட்டப்படுகிறது என்றால், தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் 29-ம் தேதி கூட்டத்தொடரை நடத்தலாம். தேர்தல் நெருக்கடியில் அவசர அவசரமாக மசோதாக்களை நிறைவேற்ற முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால், இந்த விபரீதத்தை மக்களிடம் கொண்டு செல்ல காங்கிரஸ் முடிவு செய்துள்ளது” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
