Sorting by

×

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது

`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராடியவர்களின் கோரிக்கையை ஏற்று, 719 பேருக்கு பிப்ரவரி 13 -ஆம் தேதி முதல்வர் தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது’ என கடந்த வாரம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அறிவித்திருந்தார், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

தற்போது இந்த நிகழ்ச்சிதான் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இது குறித்து கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் செவிலியர்களுக்கு இன்று அனுப்பியிருக்கும் தகவல் இதுதான்…

covid

”இன்று நமது MRB COVID செவிலியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், 719 செவிலியர்களுக்கான பணி நியமன விழா குறித்து சுகாதாரத்துறை இயக்குநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அந்த சந்திப்பில், 719 செவிலியர்கள் 2020 முதல் 2022 மார்ச் மாதம் வரை COVID பணியில் பணியாற்றியதற்கான வருகைப் பதிவு, பணியாற்றிய மருத்துவமனையின் சான்று உள்ளிட்ட‌ விவரங்கள் திரட்டப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் 75% விவரங்கள் மட்டுமே சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாம்.

குறிப்பாக சென்னை கே.எம்.சி உள்ளிட்ட மற்றும் சில மருத்துவமனைகளில் இருந்து மேற்படி தகவல்கள் டி.எம்.எஸ் அலுவலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கோவிட் சமயத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணி நிறைவு பெறும் வரை பணியாற்றிய காலத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாலும் தகுதியுடைய செவிலியர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரசு கருதுவதாலும், நாளைய பணி நியமன விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்கிற தகவலைத் தந்துள்ளார்கள்.

சுகாதாரத்துறை வட்டாரங்களில் பேசியபோது, ‘கோவிட் காலத்தில் முழுமையாகப் பணிபுரியாத சிலர் எப்படியோ பணி நியமனம் பெற்று விட்டதாக சில புகார்கள் வரப் பெற்றன. எனவே இந்த முறை அரசு தீவிரமாக விசாரித்து தகுதி உடையவர்களுக்கு மட்டும் பணி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது. எனவேதான் இந்தக் கால தாமதம்’ என்கிறார்கள் அவர்கள்.

மா. சுப்பிரமணியன்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவிட் காலத்தில் பணிபுரிந்து தற்போது வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் நாளை தங்களுக்கு வேலை கிடைத்துவிடுமென்கிற மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு சிறு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

கோவிட் சமயத்தில் பணிபுரிந்து நிரந்தரமான வேலைக்காகக் காத்திருக்கும் செவிலியர் ஒருவரிடம் பேசியபோது, ‘ஐந்து வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு. திமுக அரசு ஆட்சிக்கு வந்த போதே எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்னு நினைச்சோம். ஆனா அவங்க ஆட்சியே முடியப் போகுது. ஆட்சி முடிவடைவதற்குள் பணி கிடைச்சா நிம்மதியா இருக்கும்னு நினைச்சோம். அது நடக்கலை. இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுடுச்சுன்னா வேலை அவ்ளோதானு பயப்படுறோம். கோவிட்ல உயிரைப் பணயம் வச்சு வேலை செஞ்ச எங்களை அரசு ஏன் இந்தப் பாடுபடுத்துது தெரியலை’ என்றார் குமுறலாக.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *