அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், நாளை மாலை 8 மணிக்குள் ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியைப் போக்குவரத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இது போன்று பல முறை ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தும் அதனை ஈரான் கண்டுகொள்ளவில்லை. ட்ரம்ப் விடுத்து வரும் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து ஈரான் பாராளுமன்றத்தின் சபாநாயகர் முகமது-பாகர் கலிபாஃப் வெளியிட்டுள்ள செய்தியில், ”உங்கள் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் வாழும் நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றன.
மேலும் நீங்கள் நெதன்யாகுவின் கட்டளைகளைப் பின்பற்றினால் மத்தியக் கிழக்கு பகுதி முழுவதும் எரிந்து விழும். எந்தத் தவறும் செய்யாதீர்கள். போர்க் குற்றங்கள் மூலம் நீங்கள் எதையும் பெற மாட்டீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாய் வெளியிட்ட அறிக்கையில், ”ஒரு நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறையைக் குறிவைப்பது ஒட்டுமொத்த மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தும், இதுபோன்ற நடவடிக்கைகள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சமம்” என்றும் கூறினார்.
அதோடு 1980ம் ஆண்டு ஈரானில் சிக்கிக்கொண்ட அமெரிக்க வீரரை மீட்க முயன்று அதில் அமெரிக்கா தோல்வி அடைந்த சம்பவத்தை நினைவுபடுத்தி இருந்தார்.
கடந்த இரண்டு நாள்களாக ஈரானில் சிக்கிக்கொண்ட அமெரிக்க விமான பைலட்டை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க தனது 4 அல்லது 5 விமானங்களை இழந்ததாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இதில் இரண்டு MC-130J ரக விமானங்கள் ஈரான் தாக்குதலில் அவசரமாக தரை இறங்கியது. அந்த விமானங்கள் ஈரானிய ராணுவத்தின் கையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு விமானங்களையும் அமெரிக்க ராணுவ வீரர்களே அழித்து சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
இதனை ஈரான் உறுதிபடுத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபரின் புதிய எச்சரிக்கையால் மத்தியக் கிழக்கில் மேலும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. அதோடு இத்தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா ஏற்கனவே நவீன ஏவுகணைகளைக் கொண்டு வந்து தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
