நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ‘ஜென் ஸீ’ (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பலேன் ஷாவின் (Balen Shah) ‘ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி’ (RSP) மிகப்பெரிய வெற்றிபெறும் எனக் கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள 165 தொகுதிகளில், 144 தொகுதிகளுக்கான தரவுகளின்படி, RSP கட்சி 3 இடங்களை வென்றுள்ளதுடன், 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

நேபாளி காங்கிரஸ் 2 இடங்களை வென்று 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML) 10 தொகுதிகளிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காத்மாண்டுவின் 10 தொகுதிகளிலும் RSP கட்சியே முன்னிலை வகிக்கிறது.
காத்மாண்டுவின் மேயராக இருந்த 35 வயது பொறியாளர் பலேந்திர ஷா (பலேன்), ஜாபா-5 தொகுதியில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விடப் பன்மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது இடைக்கால அரசை வழிநடத்தப் பலேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு முழு பதவி காலத்திற்குப் பிரதமராக விரும்புவதாகக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் ஜனவரி மாதம் ரவி லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியில் இணைந்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 18 ஆண்டுகளில் 14 அரசாங்கங்களைக் கண்ட நேபாளத்தில், இந்தத் தேர்தல் ஒரு நிலையான ஆட்சியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “நேபாளத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கிறது. புதிய அரசுடன் இணைந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு முடிவு கட்டுதல், நல்லாட்சி, வாரிசு அரசியலை ஒழித்தல் மற்றும் அரசியலில் தலைமுறை மாற்றம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய போராட்டமே இந்தத் தேர்தலுக்கு அடிப்படையாக அமைந்தது. தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடதக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
