Sorting by

×

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட்டத்துடன் காய் நகர்த்துகிறாராம். குறிப்பாக, பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைக் கேட்டு அடம்பிடிக்கிறாராம் தேவராஜி. ஆனால், தேவராஜியின் விருப்பத்துக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு பிடிகொடுக்கவில்லையாம்.

இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், “அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வென்றவர். அப்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் வீரமணி அதிகாரத்தில் தொடர்ந்தார். அ.தி.மு.க ஆட்சி முடியும் தருவாயில், வீரமணி சொத்து குவிப்பு போன்ற சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.

கே.சி.வீரமணி

இதன் எதிரொலி இருந்தபோதும், மூன்றாவது முறையாக 2021 தேர்தலிலும் ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணி போட்டியிட்டார். அப்போது எதிர்முகமாக இருந்த தி.மு.க-வில், மாவட்டச் செயலாளர் தேவராஜிக்கு சீட் கிடைத்தது. ஜோலார்பேட்டை தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.

வீரமணியும், தேவராஜியும் வன்னியர் சமூகம் என்பதோடு, இருக்கட்சிகளிலுமே மாவட்டச் செயலாளர்களாக இருப்பதால் போட்டிக் கடுமையானது. கடைசியில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீரமணியை வீழ்த்தி வெற்றிபெற்றார் தேவராஜி. `எம்.எல்.ஏ ஆன பிறகு தொகுதிக்குள் தங்கவில்லை; கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை’ போன்ற குற்றச்சாட்டுகள் எழ, தேவராஜி மீது ஜோலார்பேட்டை தொகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது என்கிறார்கள்.

இந்த நிலையில், 2026 தேர்தலிலும், நான்காவது முறையாகப் போட்டியிட வீரமணி ஆயத்தமாகி, தீவிர களப்பணியிலும் ஈடுபட்டு வருவது, தேவராஜியை கலக்கமடையச் செய்திருக்கிறது. இதனால்தான் ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இருத் தொகுதிகளுக்குமே அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் தேவராஜி. இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் மேடைப் போட்டு தேவராஜியை கிழித்து தொங்கவிட்டு, பகிரங்க சவாலும் விடுத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவி.சம்பத்குமார், `கல்யாணம், காது குத்து, வாழ்வு, சாவு என எதுக்குமே தேவராஜி வாணியம்பாடி தொகுதிக்குள்ளும் வருவதில்லை; ஜோலார்பேட்டை தொகுதிக்குள்ளும் செல்வதில்லை. தேவராஜி இரட்டை வேடம் போடுகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில் அண்ணன் வீரமணியை எதிர்த்து மீண்டும் போட்டியிடு வெற்றிபெற்றுவிடு பார்க்கலாம். எதுக்கு வாணியம்பாடி கேட்குற. உனக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா? வீரமணியை இந்த முறை நீ ஜெயிச்சுட்ட நான் அரசியலை விட்டே ஒதுங்கிக்கிறேன்’ என்று சவால்விட்டிருக்கிறார்.

தேவராஜி

எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு பேச்சாளர் பேசியிருந்தால்கூட கண்டுகொள்ளத் தேவையில்லை. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரே போட்டிக்கு அழைத்திருக்கிறார். அவர் சவால்விடுக்கும் வீடியோவும் படுவைரலாகி, பொதுமக்களிடமும் கவனம் பெற்றுவிட்டது. எனவே, தேவராஜி அவ்வளவு எளிதாக தொகுதி மாறி சென்றுவிட முடியாது. ஒருவேளை தொகுதி மாறிச் சென்றால், அ.தி.மு.க-வினர் விடுத்த சவால் ஜோலார்பேட்டை தொகுதியிலும் எதிரொலிக்கும்; வாணியம்பாடி தொகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே சமயம், வாணியம்பாடி தொகுதிக்குள் தேவராஜிக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. வாணியம்பாடி நகரத் தி.மு.க-வினரே தேவராஜிக்கு எதிராக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணியை எதிர்த்து தேவராஜி களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். இதையெல்லாம் கவனித்த பிறகே, `ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று தேவராஜியை மீண்டும் ஜோலார்பேட்டையில் களமிறக்க அமைச்சர் எ.வ.வேலு முடிவுசெய்திருக்கிறார்’’ என்கின்றனர் விவரமாக.

இந்த அரசியல் வெப்பத்தால் தகிக்கிறது `திருப்பத்தூர்’ மாவட்டம்!

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *